Last Updated : 09 Jun, 2016 10:29 AM

 

Published : 09 Jun 2016 10:29 AM
Last Updated : 09 Jun 2016 10:29 AM

சுவர், ஜன்னல், கதவுகளும் பாடம் கற்பிக்கின்றன: அரசுப் பள்ளி ஆசிரியர்கள் உருவாக்கிய ‘மாதிரி வகுப்பறை’

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள டி.நல்லிக் கவுண்டம்பாளையம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த 190 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். செயல் வழிக் கற்றலுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால், இந்த அரசுப் பள்ளிக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

முதலுதவி சிகிச்சை குறித்த பாடத்துக்கு 108 ஆம்புலன்ஸை வரவழைத்து பாடம் நடத்தினர். எளிய முறையில் கணிதம் பயில, கதை சொல்லல் மூலம் பாடம் நடத்த திறமையான வல்லுநர்களை அழைத்து வந்து மாணவர்களின் திறமைகளை வளர்த்து வருகின்றனர் இப்பள்ளி ஆசிரியர்கள்.

இந்த கல்வியாண்டில், புதிதாக கட்டப்பட்ட வகுப்பறை ஒன்றைத் தேர்வு செய்து, அதன் பூச்சு வேலைகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியுடன், ஆசிரியர்களும் பங்களித்து வகுப்பறை முழுவதும் ஓவியங்களால் வரைந்து நிரப்பியுள் ளனர். கதவு, ஜன்னல், சுவர், தூண், கூரை என அனைத்திலுமே மாணவர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய கல்வி சார்ந்த தகவல் கள் எழுத்துகளாகவும், ஓவியங் களாகவும் கொட்டிக் கிடக்கின்றன. பார்க்கும் இடமெங்கும் வண்ண ஓவியங்கள் மூலம் மாணவர்களை கவரும் வகையில் தகவல்கள் தரப்பட்டுள்ளன.

‘கல்வி என்பது திணிப்பதும், வசப்படுத்துவதும் அல்ல. மாறாக, பங்கேற்க வைப்பதும், உருவாக்கு வதும்’ என்ற வாசகத்துடன் இந்த மாதிரி வகுப்பறை வரவேற்கிறது. அதன் உள்ளே சிறுவர், சிறுமியர் எளிதில் கற்றுக்கொள்ளும் வகை யில், அவர்களுக்குப் பிடித்தமான கார்ட்டூன் உருவங்கள் மூலம் ஏராளமான தகவல்கள் வரையப் பட்டுள்ளன.

திருக்குறள், தமிழ் செய்யுள், ஆங்கில எழுத்துகள், கணித அளவைகள், அளவீடுகள் குறித்த தகவல்களும் வரையப்பட்டுள்ளன. அறிவியல் பாடத்துக்கு பயன்படும் வகையில், உயிரினங்கள், மலர்கள், காய்கறிகள் குறித்து வரைபடங்களுடன் கூடிய தகவல்கள், சமூக அறிவியல் பாடத்துக்கு உதவும் வகையில் புவியியல் சார்ந்த ஏராளமான தகவல்கள் இங்கு ஈர்க்கும் வகையில் வரையப்பட்டுள்ளன.

அதுமட்டுமின்றி போக்கு வரத்து சைகைகள், உணவுச் சங்கிலி, உடற்கூறு அறிவியல், மாணவர்களுக்கான விளையாட்டுகள் என திரும்பும் திசை யெங்கும் எளிமையாய் கல்வியை எடுத்துக் கூறும் வண்ண ஓவியங்களே நிறைந்திருக்கின்றன.

கண் முன்னே விளக்கம்

பள்ளி ஆசிரியர்கள் கூறும்போது, “ஒரு பாடத்தை மாணவர்களுக்கு எப்படி சொல்லிக் கொடுத்தால் புரியும் என்பதை யோசித்து அதற்கேற்ப பாடம் நடத்தி வருகிறோம். கடினமான பாடத் திட்டங்களுக்கு செயல்வழிக் கற்றலை ஊக்குவிக்கிறோம். ஓவியர் ஒருவரை அழைத்து வந்து, கல்வி சார்ந்த தகவல்களை சிறுவர்களுக்கு புரியும் வகையிலும், பிடிக்கும் வகையிலும் ஓவியங்களை வரைந்து இருப்பது மாணவர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது’’ என்றனர்.

தலைமையாசிரியர் கே.சந்திரா கூறும்போது, ‘‘கிராமம் என்பதால் மாணவர்களின் கல்வியை ஊக்கு விக்க யாரும் தயாராக இல்லை. அந்த பணியை ஆசிரியர்கள் கையில் எடுத்துள்ளனர். பாடம் சார்ந்த ஓவியத்தைப் பார்த்துவிட்டு, பாடத்தை கவனிக்கும்போது அது மாணவருக்கு மிக எளிமையாகப் புரியும். சந்தேகம் வந்தாலும் அதை தீர்க்க கண் முன்னே இருக்கும் ஓவியம் விளக்கமளிக்கும். இதுவே மாதிரி வகுப்பறையின் நோக்கம். இந்த வகுப்பறைக்கு ஓவியம் வரைய பழனிக்குமார் என்ற ஆசிரியர் சொந்த பணத்தை செலவழித்துள்ளார்.

அதேபோல 8 ஆசிரியர்கள் இணைந்து, அடுத்ததாக 3 வகுப்பறைகளையும், அதைத் தொடர்ந்து அனைத்து வகுப்பறைகளையும் இதேபோல மாற்ற முடிவு செய்துள்ளனர்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x