Last Updated : 06 Nov, 2014 10:28 AM

 

Published : 06 Nov 2014 10:28 AM
Last Updated : 06 Nov 2014 10:28 AM

10 மாதங்களில் 1,600 பேருக்கு டெங்கு பாதிப்பு: தமிழக அரசு மருத்துவமனைகளில் நிலவேம்பு கசாயம் விநியோகம்

தமிழகத்தில் கடந்த 10 மாதங்களில் 1,600 பேர் டெங்கு நோயால் பாதிக் கப்பட்டுள்ளனர். ஆரம்ப சுகாதார நிலையங்களில் டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு கசாயம் கொடுக்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் சென்னை, விழுப்புரம், கடலூர், தர்மபுரி, திரு வண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் தீவிரமாக உள்ளது. இவை தவிர மற்ற மாவட்டங்களிலும் டெங்கு காய்ச்சல் ஓரளவு காணப்படுகிறது. சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 2 வாரங் களுக்கு முன்பு 10 பேரும், கீழ்ப் பாக்கம் அரசு மருத்துவமனை யில் ஒரு குழந்தையும் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று சென்றுள்ளனர். கடந்த செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் 4 பேர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்த தாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால், டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் எஜிப்டி என்ற வகை கொசுக்களின் உற்பத்தி அதிகரித்துள்ளது. அதனால் டெங்கு காய்ச்சல் குறித்த பீதி பொது மக்களிடையே அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டுகளை விட குறைவு

இதுபற்றி சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: கடந்த ஆண்டுகளைவிட, இந்த ஆண்டு டெங்கு காய்ச்சலின் பாதிப்பு குறைந்துள்ளது. 2012-ம் ஆண்டு 13,204 பேரும், 2013-ம் ஆண்டு 6,122 பேரும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். 2014-ம் ஆண்டில் ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான 10 மாதத்தில் 1,600 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு காய்ச்சலை தடுக்க அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.

நிலவேம்பு கசாயம்

டெங்கு காய்ச்சலுக்கு அரசு மருத்துவமனைகளில் நிலவேம்பு கசாயம் கொடுக்கப்படுகிறது. அதே போல 1,750 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் காய்ச்சலுக்கு நிலவேம்பு கசாயம் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சல் பாதிப்புள்ள மாவட்டங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது. பொதுமக்களிடம் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத் தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

நிலவேம்பு கசாயம் தட்டுப்பாடு

சென்னையில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் உள்ள சித்தா மருத்துவப் பிரிவில் நிலவேம்பு கசாயம் தயாரிக்கப் பட்டு நோயாளிகளுக்கு வழங்கப் படுகிறது.

ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை மற்றும் ஸ்டான்லி அரசு மருத்துவ மனையில் நிலவேம்பு கசாயம் தயாரிக்கப்படுவதில்லை. அரும் பாக்கத்தில் உள்ள அரசு சித்தா மருத்துவக் கல்லூரி மருத்து வமனையில் உள்ள பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் குழுவினர் நிலவேம்பு கசாயத்தை கொண்டு வந்து கொடுக்கின்றனர். இதனால் இந்த 3 மருத்துவமனைகளிலும் நிலவேம்பு கசாயம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

கொசு வலையுடன் தனி வார்டு இல்லை

தமிழகத்தில் 2 ஆண்டுகளுக்கு முன்பு டெங்கு காய்ச்சல் தீவிரமாக இருந்தது. இதைத் தொடர்ந்து அனைத்து அரசு மருத்துவமனை களிலும் டெங்கு காய்ச்சலுக்கு தனி வார்டு அமைக்கப்பட்டது. அந்த வார்டில் ஒவ்வொரு படுக்கைக் கும் கொசுவலை கட்டப்பட்டது. ஆனால் தற்போது டெங்கு காய்ச் சலுக்கு கொசு வலைகளுடன் கூடிய சிறப்பு வார்டுகள் அமைக்கப்படவில்லை.

டெங்கு காய்ச்சல் நோயாளி களை சாதாரண வார்டில் வைத்தே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x