Published : 22 Dec 2013 12:00 AM
Last Updated : 22 Dec 2013 12:00 AM

மனைவியுடன் பேச அனுமதி மறுப்பு: வேலூர் மத்திய சிறையில் முருகன் திடீர் உண்ணாவிரதம்

வேலூர் பெண்கள் தனிச்சிறையில் உள்ள தனது மனைவி நளினியுடன் பேச அனுமதி மறுக்கப்பட்டதால் முருகன் திடீர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்துவரும் நளினி, வேலூர் பெண்கள் தனிச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதே வழக்கில் தூக்கு தண்டனை பெற்றுள்ள நளினியின் கணவர் கரன் என்ற முருகன், வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இரு வரும் கணவன் மனைவி என்ப தால் 15 நாட்களுக்கு ஒருமுறை சனிக்கிழமை 30 நிமிடங்கள் சந்தித்து பேசிக்கொள்ள உயர்நீதி மன்றம் அனுமதி அளித்துள்ளது. இருவரும் வழக்கம்போல சந்தித்து பேசிவருகின்றனர்.

இந்நிலையில், சனிக்கிழமை (21ம் தேதி) காலை 8 மணிக்கு வேலூர் மாவட்ட குற்ற ஆவண காப்பக டிஎஸ்பி கணேசன் தலை மையிலான போலீஸார் பலத்த பாது காப்புடன் முருகனை, பெண்கள் தனிச் சிறைக்கு அழைத்துச் சென்றனர். வழக்கமாக இருவரும் சந்தித்துப் பேசும் அறையில் முருகன் அமர வைக்கப்பட்டார். சிறிது நேரத்தில் நேர்காணலை ரத்து செய்வதாகக் கூறி முருகன் அங்கிருந்து புறப்பட்டுள்ளார். சிறை அதிகாரிகளிடம் பேசிய முருகன், எனது மனைவியை சந்திக்க அனுமதி மறுக்கப்படுகிறது. இத னைக் கண்டித்து உண்ணா விரதம் இருக்கிறேன்’ என கூறியுள்ளார்.

வேலூர் ஆண்கள் மத்திய சிறைக்கு சனிக்கிழமை வந்த நளினியின் வழக்கறிஞர் புகழேந்தி யும், முருகன் உண்ணாவிரதம் இருக்கும் தகவலை உறுதி செய்தார்.

நளினி-முருகன் சந்திப்பு ரத்து செய்யப்பட்டது குறித்து சிறை அதிகாரிகள் கூறுகையில், “வழக்கமான சந்திப்பு நடக்கும் பகுதியில் முருகன், நளினி இரு வரும் அமரவைக்கப்பட்டனர். இரு வரும் அமர்ந்து பேசும் மேஜைக்கு நடுவில் தடுப்புகள் இல்லாமல் மனைவியுடன் நெருங்கிப் பேச அனுமதிக்க வேண்டும் என்று முருகன் கேட்டார். இதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களோ, இதுவரை என்ன நடைமுறையில் இருவரும் சந்தித்தார்களோ, அதே நடைமுறை தொடரும். எந்த சிறப்பு சலுகையும் அளிக்கப்படமாட்டாது என தெரிவித்துவிட்டனர். இதனால், கோபமடைந்த முருகன், மனைவி யுடன் பேசுவதை ரத்து செய்துவிட்டு சென்றுவிட்டார். நளினியும் அவரது அறைக்குச் சென்றுவிட்டார்” என்றனர்.

தந்தைக்கு உடல் நலக்குறைவு: ஒரு மாதம் விடுப்பு கேட்டு நளினி மனு

உடல் நலக்குறைவால் வாடும் தனது தந்தையைச் சந்திப்பதற்காக 1 மாதம் விடுமுறை அளிக்க வேண்டும் என சிறைத்துறை தலைவருக்கு நளினி மனு அளித்துள்ளார்.

வேலூர் பெண்கள் தனிச் சிறையில் உள்ள நளினி, தமிழக சிறைத் துறை தலைவருக்கு கடந்த 12-ம் தேதி மனு ஒன்றை வேலூர் பெண்கள் சிறை நிர்வாகத்திடம் அளித்துள்ளார். அதில், பூந்தமல்லி தடா நீதிமன்றம் அளித்த தீர்ப்பிற்கு பிறகு 22 ஆண்டுகளாக சிறையில் உள்ளேன். எனது தந்தை ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளர் சங்கரநாராயணன் (90) கண்பார்வை குறைந்து உடல் நலக் குறைவால் படுத்த படுக்கையாக இருக்கிறார்.

அவரை சந்தித்து 8 ஆண்டுகள் ஆகின்றன. கடைசிக் காலத்தில் அவருடன் இருக்க விரும்புகிறேன். எனது தம்பியின் திருமணத்திற்காக 3 நாள் பரோலில் செல்ல அனுமதி கிடைத்தது. ஆனால், ஒரே நாள் விடுப்பில் சென்றேன். எனவே, 1 மாதம் விடுப்பு (பரோல்) அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x