Published : 03 Apr 2017 11:57 AM
Last Updated : 03 Apr 2017 11:57 AM

பேட்மிண்டன் சாம்பியன் பி.வி.சிந்துவுக்கு வாசன் வாழ்த்து

இந்தியாவின் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து ஸ்பெயின் நாட்டின் கரோலினா மரியாவுடன் போட்டியிட்டு சாம்பியன் பட்டம் வென்றதற்கு தமாகா தலைவர் வாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திங்கட்கிழமை அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், ''2017-ம் ஆண்டுக்கான இந்தியன் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து ஸ்பெயின் நாட்டின் கரோலினா மரியாவுடன் போட்டியிட்டு சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறார். இது மகிழ்ச்சிக்குரியது. பாராட்டுக்குரியது.

ஏற்கெனவே நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் இறுதிப் போட்டியில் பி.வி.சிந்து, கரோலினா மரியாவுடன் மோதியபோது பி.வி.சிந்து வெள்ளிப்பதக்கம் வென்றார். மீண்டும் இவர்கள் இருவரும் இப்போது நடைபெற்ற இறுதிப் போட்டியில் மோதியதால் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கேற்ப பி.வி.சிந்து ஆரம்பம் முதலே தனது தனித்திறமையை வெளிப்படுத்தி, முன்னேறி இறுதியில் வெற்றி பெற்று, சாம்பியன் ஆனார். இது வீராங்கனை பி.வி.சிந்துவின் கடின பயிற்சிக்கும், தொடர் முயற்சிக்கும் கிடைத்த வெற்றியாகும்.

சாதனை நாயகியான பி.வி.சிந்துவின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த அவரது பெற்றோருக்கும், அவரது பயிற்சியாளருக்கும் வாழ்த்துகள், பாராட்டுகள். மேலும் பி.வி.சிந்து அவர்கள் தொடர்ந்து பல்வேறு சாதனைகளைப் படைத்து நம் நாட்டின் பெருமையை உலகம் முழுவதும் பரப்ப வேண்டும்.

சாம்பியன் பி.வி.சிந்துவின் சாதனைக்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்'' என்று வாசன் கூறியுள்ளார்.









FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x