Published : 18 Jun 2016 11:11 AM
Last Updated : 18 Jun 2016 11:11 AM

உள்ளாட்சித் தேர்தல்: காங்கிரஸ் மேலிடத் தலைவர்களுடன் இளங்கோவன் ஆலோசனை- சோனியாவையும் சந்திக்கிறார்

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் மேலிடத் தலைவர்களுடன் அக்கட்சியின் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் டெல்லியில் நேற்று ஆலோசனை நடத்தினார்.

கடந்த மே 16-ம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 41 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 8 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. தேர்தலில் தோல்வி அடைந்த வேட்பாளர்களில் பலர் இளங்கோவன் மீது புகார் தெரிவித்துள்ளனர்.

செய்யாறு தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் மாநிலத் தலைவர் எம்.கிருஷ்ணசாமியின் மகன் டாக்டர் விஷ்ணுபிரசாத், ‘‘தனது தோல்விக்கு இளங்கோவனின் ஒத்துழைப்பு இல்லாததே காரணம்’’ என குற்றம்சாட்டியிருந்தார். அதனைத் தொடர்ந்து அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

வேட்பாளர்கள் மற்றும் கட்சியினரின் புகாரைத் தொடர்ந்து திருவள்ளூர் தெற்கு, திருப்பூர் புறநகர், நாகை வடக்கு, திருநெல்வேலி மேற்கு, திருநெல்வேலி மாநகர், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி ஆகிய 7 மாவட்டத் தலைவர்களை இளங்கோவன் அதிரடியாக நீக்கினார்.

நீக்கப்பட்ட அனைவரும் காங்கிரஸ் அகில இந்தியப் பொதுச்செயலாளரும், தமிழகப் பொறுப்பாளருமான முகுல் வாஸ்னிக், பொதுச்செயலாளர் குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோரிடம் புகார் தெரிவித்துள்ளனர். இதற்காக அவர்கள் கடந்த சில நாள்களாக டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.

இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி, முகுல் வாஸ்னிக் ஆகியோரைச் சந்தித்து விளக்கம் அளிப்பதற்காக இளங்கோவன் டெல்லி சென்றுள்ளார்.

நேற்று காலை அவர் முகுல் வாஸ்னிக்கை சந்தித்து 7 மாவட்டத் தலைவர்கள் நீக்கம், கட்சியிலிருந்து விஷ்ணு பிரசாத் நீக்கப்பட்டது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தலைத் தொடர்ந்து இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடரும் என இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சித் தலைவர்கள், உறுப்பினர்கள், மாவட்ட, ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் பதவிகளில் எத்தனை சதவீத்தை கேட்டுப் பெறுவது என்பது தொடர்பாக முகுல் வாஸ்னிக் உள்ளிட்ட தலைவர்களுடன் இளங்கோவன் டெல்லியில் நேற்று ஆலோசனை நடத்தினார். குறைந்தது 2 மாநகராட்சிகள், 30 முதல் 40 சதவீத இடங்களைக் கேட்டுப் பெற காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த வாரம் ராகுல் காந்தியை சந்தித்துப் பேசிய இளங்கோவன், சோனியா காந்தியையும் சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளார். அப்போது சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வி, மாவட்டத் தலைவர்கள் நீக்கம், உள்ளாட்சித் தேர்தல் ஆகியவை குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக காங்கிரஸ் தலைவர் ஒருவர் 'தி இந்து'விடம் தெரிவித்தார்.

இது தொடர்பாக இளங்கோவனிடம் கேட்டபோது, "உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக விவாதிப்பதற்கா டெல்லி வந்துள்ளேன். இன்று அல்லது நாளை சோனியா காந்தியை சந்தித்துப் பேசுவேன். உள்ளாட்சித் தேர்தலிலும் திமுகவுடனான கூட்டணி தொடரும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x