Published : 05 Apr 2014 12:35 PM
Last Updated : 05 Apr 2014 12:35 PM

ரூ.10 லட்சம் மோசடி: வங்கி மேலாளர் மீது வழக்கு

வங்கி கடன் வாங்க வந்தவர்களிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக, திருவள்ளூரை அடுத்த பட்டரைபெரும்புதூரில் உள்ள பொதுத்துறை வங்கி ஒன்றின் மேலாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருவள்ளூர் அடுத்த பட்டரை பெரும்புதூரை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் அங்குள்ள பொதுத்துறை வங்கி கிளையில் வீட்டை அடமானம் வைத்து, 2012-ம் ஆண்டு ரூ.2 லட்சம் கடன் பெற்றுள்ளார்.

வாங்கிய கடனை அவரால் திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டதையடுத்து, அவருக்கு வங்கி தரப்பில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அவர் வங்கிக் கிளைக்கு நேரில் சென்று விளக்கம் அளிக்கச் சென்ற போது, வங்கித் தரப்பில் அவர் ரூ.10 லட்சம் கடன் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ராமச்சந்திரன், வங்கிக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பினார்.

மேலும், இதுதொடர்பாக அவர் விசாரித்ததில் வங்கியின் மேலாளராக உள்ள கண்ணன் என்பவர், ராமச்சந்திரன் கையெழுத்து இட்டு அளித்த விண்ணப்பப் படிவத்தில், அவருக்குத் தெரியாமல் ரூ.2 லட்சத்துக்குப் பதிலாக ரூ.10 லட்சத்தை ராமச்சந்திரன் பெயரில் கடன் வாங்கியுள்ளார். அதில் ரூ.2 லட்சத்தை மட்டும் ராமச்சந்திரனுக்கு வழங்கிவிட்டு, மீதமுள்ள ரூ.8 லட்சத்தை வங்கி மேலாளர் கண்ணன் கையாடல் செய்திருப்பது தெரியவந்தது.

இதேபோல், மேலும் 12 பேரிடம் அவர் மொத்தம் ரூ.10 லட்சம் வரை மோசடி செய்துள்ளார்.

இதுகுறித்து, ராமச்சந்திரன் உள்பட 13 பேர் அளித்த புகாரின்பேரில், மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வங்கி மேலாளர் கண்ணன் மீது வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x