Last Updated : 06 Feb, 2014 09:40 AM

 

Published : 06 Feb 2014 09:40 AM
Last Updated : 06 Feb 2014 09:40 AM

விஜயகாந்த் வெற்றியை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு- சட்டசபைக்கு செல்ல தடை விதிக்க கோரிக்கை

தேமுதிக தலைவர் விஜயகாந்த், ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டதை செல்லாது என அறிவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகும் வரை, சட்டமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்கக் கூடாது என்று விஜயகாந்துக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் விஜயகாந்த் போட்டியிட்ட ரிஷிவந்தியம் தொகுதியில் எம்.ஜெயந்தி என்பவரும் வேட்புமனு தாக்கல் செய்தார். ஆனால், அவரின் மனுவை தேர்தல் அதிகாரி நிராகரித்து விட்டார்.

தனது வேட்புமனுவை நிராகரித்த தேர்தல் அதிகாரியின் செயல் தவறானது. முன்னதாக வேட்புமனுவை தாக்கல் செய்ய வந்தபோது, அடையாளம் தெரியாதவர்கள் எனது மனுவை பறித்து கிழித்தெறிந்தனர். அவர்கள் விஜயகாந்தின் ஆதரவாளர்கள். எனவே, விஜயகாந்த் வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயந்தி மனு தாக்கல் செய்தார்.

ஜெயந்தியின் வேட்புமனு, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி இல்லை. எனவே, அவரின் மனுவை தள்ளுபடி செய்த தேர்தல் அதிகாரியின் நடவடிக்கை சரியானதுதான் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஜெயந்தி மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும்.

இந்த மேல் முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வெளியாகும் வரை, விஜயகாந்துக்கு எம்.எல்.ஏ. என்ற அடிப்படையில் வழங்கப்படும் ஊதியம், இதர படிகள் உள்ளிட்டவற்றை நிறுத்தி வைக்க வேண்டும். சட்டமன்றக் கூட்டத்தொடரில் விஜயகாந்த் பங்கேற்பதற்கும் இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று ஜெயந்தி குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x