Published : 10 Feb 2014 11:59 AM
Last Updated : 10 Feb 2014 11:59 AM

கம்பம் பள்ளத்தாக்கு பகுதி நெற்பயிர்களைக் காக்க முல்லை பெரியாறு தண்ணீர் வழங்க வைகோ வலியுறுத்தல்

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் நெற்பயிர்களைக் காக்க, முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுமாறு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "முல்லை பெரியாறு அணையில் தற்போதைய நீர் மட்டம் 111 ஆடி. அணையில் இருந்து வினாடிக்கு 100 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. தற்போது கம்பம் பள்ளத்தாக்கில் 17 வாய்க்கால்களில் நெல் நடவு செய்யப்பட்டுள்ளது. நெல் நடவு நட்டு கம்பம் பகுதியில் 70 நாட்கள், சின்னமனூர் பகுதியில் 40 நாட்கள், வீரபாண்டி பகுதியில் 30 நாட்கள் என இவ்வாறு பலவித நிலையில் உள்ளன.

கம்பம் சின்ன வாய்க்கால் பகுதியில் மட்டும் சுமார் 2,000 ஏக்கரில் நெல் அறுவடை செய்யக்கூடிய நிலையில் உள்ளது. அந்த 2,000 ஏக்கருக்கு ஒருமுறை மட்டும் தொடர்ந்து ஐந்து நாட்கள் வினாடிக்கு 25 கனஅடி வீதம் தண்ணீர் கொடுத்தால், 2,000 ஏக்கர் நெற்பயிர்களும் காப்பாற்றப்பட்டுவிடும்.

கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதியில் இருந்து தண்ணீர் இல்லை என்று கூறி, 17 வாய்க்கால்களையும் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி அடைத்துவிட்டார்கள். கம்பம் உத்தமபுரம் விவசாயிகள் பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு மன்றாடிக் கேட்டும் தண்ணீர் திறந்துவிடாததால், 08.02.2014 அன்று அறவழி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

மாவட்ட ஆட்சித் தலைவர், பொதுப்பணித்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தவித உத்தரவாதமும் கொடுக்கவில்லை. இன்னும் ஓரிரு நாட்களில் தண்ணீர் கொடுக்காவிட்டால், நெல்மணிகள் பால் ஏறாமல் பலனின்றி அழிந்துவிடும்.

எனவே, 12 ஆயிரம் ஏக்கரில் நெல் நடவு செய்யப்பட்ட 50 நாட்கள், 30 நாட்கள் பயிர்களையும் காப்பாற்ற தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல், ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் பாழாகி, விவசாயிகள் பெரும் துயரத்துக்கு ஆளாக நேரிடும்". இவ்வாறு வைகோ வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x