Published : 23 Dec 2013 09:40 AM
Last Updated : 23 Dec 2013 09:40 AM

முன்னாள் பெண் ஊழியர் புகார்: தனியார் டி.வி. செய்தி ஆசிரியர் கைது

சென்னை அடுத்த போரூர் கார்டன் பகுதியில் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தின் அலுவலகம் உள்ளது. இங்கு துணை ஆசிரியராக வண்டலூரைச் சேர்ந்த மோகனா (30) பணிபுரிந்தார். சில நாட்களுக்கு முன்பு அவர் பணியில் இருந்து விலகி விட்டார்.

இதற்கிடையே, மதுரவாயல் காவல் நிலையத்தில் மோகனா ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில், ‘தொலைக்காட்சி நிறுவனத்தின் செய்தி ஆசிரியராக இருக்கும் தினேஷ்குமார், பணியில் இருந்தபோது எனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார்’ என்று கூறியுள்ளார்.

இந்தப் புகாரின் பேரில் மதுரவாயல் போலீஸார் வழக்கு பதிந்து, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1 மணியளவில் போரூர் கார்டன் பகுதியில் வசித்து வரும் தினேஷ்குமாரை கைது செய்தனர். அவர் மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர் அவரை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து தொலைக்காட்சி நிர்வாகத்திடம் கேட்டபோது, ‘எங்கள் தொலைக்காட்சி நிருபரும் புகைப்பட நிபுணர்களும் மதுரவாயல் பகுதியில் சில நாட்களுக்கு முன்பு தாக்கப்பட்டனர். இதைக் கண்டித்து மதுரவாயல் காவல் நிலையம் அருகே மறியல் நடத்தப்பட்டது. இதை தினேஷ்குமார் முன்னின்று நடத்தினார். இது காவல் துறையினருக்கு சிக்கலை ஏற்படுத்தியது. இந்த காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவே அவர் மீது பொய்யான புகார் கொடுக்கப்பட்டு, கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. புகார் கொடுத்துள்ள பெண், பணியில் இருந்தபோது நிர்வாகத்திடம் எந்தப் புகாரும் கொடுக்கவில்லை’ என்று கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x