Published : 28 Nov 2014 11:30 AM
Last Updated : 28 Nov 2014 11:30 AM

மோட்டார் வாகன ஆய்வாளர் தேர்வு முடிவு எப்போது? - 2 ஆயிரம் பேர் 2 ஆண்டுகளாக காத்திருப்பு

மோட்டார் வாகன ஆய்வாளர் தேர்வு முடிந்து 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் முடிவு வெளியிடப்படாததால் தேர்வு எழுதிய 2 ஆயிரம் மாணவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

தமிழக அரசின் போக்குவரத்துத் துறையில் மோட்டார் வாகன ஆய்வாளர் (கிரேடு-2) பதவியில் 17 காலியிடங்களை நிரப்ப கடந்த 2012-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. மெக்கானிக்கல் அல்லது ஆட்டோமொபைல் பொறியியல் டிப்ளமோ படிப்பு, கனரக வாகன பணி அனுபவம், கனரக வாகன ஓட்டுநர் உரிமம் ஆகியவை இப்பணிக்கான அடிப்படை தகுதிகள் ஆகும்.

இந்த தேர்வை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் எழுதினர். இவ்வாறு நேரடியாக மோட்டார் வாகன ஆய்வாளராக பணியில் சேருவோர்தான் பிறகு மண்டல போக்குவரத்து அதிகாரியாக (ஆர்.டி.ஓ.) பதவி உயர்வு பெறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்வு நடந்து முடிந்து சுமார் 8 மாதங்கள் கழித்து, சான்றொப்பம் பெறப்பட்ட சான்றிதழ்களை சமர்ப்பிக்குமாறு ஒரு சில தேர்வர்களுக்கு கடந்த 2013 ஏப்ரல் மாதவாக்கில் டிஎன்பிஎஸ்சி அலுவலகத்திலிருந்து தபால் வந்தது. இதைத் தொடர்ந்து, அந்த தேர்வர்கள் கேட்கப்பட்ட அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்துவிட்டனர்.

ஆனால், எழுத்துத் தேர்வு முடிவடைந்து 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்னும் முடிவு வெளியிடப்படவில்லை. சான்றொப்பமிட்ட சான்றிதழ்கள் கேட்டு வரப்பெற்ற தேர்வர்களும் தாங்கள் தேர்வில் வெற்றி பெற்றிருப்போமோ என்பது உறுதியாகத் தெரியாமல் தவியாய் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் ஒரு சில தேர்வர்கள் நேரில் சென்று கேட்டபோது நீதிமன்ற வழக்கு காரணமாக தேர்வு முடிவு வெளியிட தாமதம் ஆகிவருவதாக சொல்லப்பட்டுள்ளது.

இந்த பிரச்சினை குறித்து டிஎன்பிஎஸ்சி உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, “எழுத்துத் தேர்வு முடிவு தயாராகவே உள்ளது. இப்பணிக்கு நிர்ணயிக்கப்பட்ட தொழில்நுட்பத் தகுதிகள் தொடர்பாக தேர்வு எழுதியவர்கள் சமர்ப்பித்துள்ள சான்றிதழ்களின் உண்மைத்தன்மை குறித்து போக்குவரத்துத் துறையிடமிருந்து தகவல் வரப்பெற்றதும் தேர்வு முடிவு உடனடியாக வெளியிடப்படும்” என்று தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x