தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் சில இடங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் சில இடங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்
Updated on
1 min read

வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று பரவலாக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக ஓசூர், நத்தம் ஆகிய இடங்களில் தலா 60 மி.மீ. மீட்டர் மழை பதிவானது. காவேரிப்பாக்கம் 40 மி.மீ., சோளிங்கர், அரக்கோணத்தில் தலா 30 மி.மீ., மேட்டூரில் 20 மி.மீ., மேலூர், தாம்பரம், வாணியம்பாடி, காஞ்சீபுரம், அரூர், சூளகிரி, வாலஜா, ஊட்டி ஆகிய இடங்களில் தலா 10 மில்லி மீட்டர் மழை பதிவானது. இன்று அதிகபட்சமாக மதுரையில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது.

“அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பசலனம் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்யக்கூடும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்யும்.

அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும். கேரளாவில் அடுத்த இரண்டு நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன” என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in