Published : 16 Aug 2016 08:57 PM
Last Updated : 16 Aug 2016 08:57 PM

விசைப்படகு மூழ்கியதால் கடலில் தத்தளித்த 17 ஆந்திர மீனவர்கள்: தமிழக மீனவர்கள் மீட்டனர்

ஆந்திர மீனவர்களின் விசைப்படகு கடலில் மூழ்கியதால் அதில் இருந்த 17 மீனவர்களை தமிழக மீனவர்கள் மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர்.

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து திங்கட்கிழமை காலை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். ஆந்திர கடல் எல்லை பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது அங்கு வந்த ஆந்திர விசைப்படகு ஒன்று தமிழக மீனவர்கள் சென்ற விசைப்படகில் மோதியது. இதில் ஆந்திர விசைப்படகு சேதமடைந்து கடலில் மூழ்க தொடங்கியது. அதிலிருந்த 17 ஆந்திர மீனவர்கள் கடலில் தத்தளிப்பதை பார்த்ததும் தமிழக மீனவர்கள் அவர்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் அவர்களை மீன்பிடி துறைமுக போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து மீனவர்கள் கூறுகையில், ''ஆந்திர கடல் பகுதியில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களை ஆந்திர மீனவர்கள் தாக்குவதும், அவர்களை கடத்தி சென்று பொருட்களை கொள்ளையடிப்பதும் வழக்கமாக இருந்தது. தற்போது நடந்த சம்பவத்திலும் தமிழக மீனவர்களின் படகில் மோதி அவர்களின் அவர்களை சிறை பிடிக்க அல்லது பொருட்களை கொள்ளையடிக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர். ஆனால் எதிர்பாராத விதமாக அவர்களின் படகு உடைந்து மூழ்கி விட்டது. மனிதாபிமான அடிப்படையில் அவர்களை அழைத்து வந்திருக்கிறோம்'' என்றார்.

ஆந்திர மீனவர்களிடம் போலீஸாரும், மீன் வளத்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x