இலங்கையில் உள்ள தமிழக மீனவர்கள், படகுகளை விடுவிக்க நடவடிக்கை: அமைச்சர் டி.ஜெயக்குமார் உறுதி
இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் திமுக உறுப்பினர் உ.மதிவாணன் (கீழ்வேளூர்) எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து அமைச்சர் பேசியதாவது:
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதும், அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்ந்து நடந்துவருகிறது. இதனைத் தடுத்து நிறுத்தக்கோரியும், இலங்கையில் உள்ள தமிழக மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்கக் கோரியும் பிரதமர் மோடிக்கு முதல்வர் கே.பழனிசாமி பலமுறை கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து நேரில் சந்தித்தும் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் உள்ள தமிழக மீனவர்கள் விரைவில் விடுவிக்கப்படுவார்கள். அது போல அந்நாட்டு கடற்படை கைப்பற்றிய படகுகளும் விரைவில் மீட்கப்படும். இதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
