Published : 24 Sep 2013 09:51 AM
Last Updated : 24 Sep 2013 09:51 AM

சென்னையில் கூலிப்படையால் வெட்டப்பட்ட டாக்டர் சாவு

சென்னையில் கூலிப்படையால் சில தினங்களுக்கு முன்பு தாக்கப்பட்ட டாக்டர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

துரைப்பாக்கம் 3-வது தெருவில் உள்ள குமரன் குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்தவர் டாக்டர் சுப்பையா (58). சென்னை அரசு மருத்துவக் கல்லூரியின் முன்னாள் நரம்பியல் துறை பேராசிரியரான இவர், ஓய்வுக்குப் பின் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்தார்.

கடந்த 14-ம் தேதி, ஆர்.ஏ.புரம் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்குச் செல்ல காரை நோக்கிச் சென்றார். அப்போது, காருக்கு அருகில் மறைந்து இருந்த சிலர், டாக்டர் சுப்பையாவை சரமாரியாக வெட்டினர். பலத்த வெட்டுக் காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த அவர், அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக அமைந்தகரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சுப்பையா சேர்க்கப்பட்டார்.

வழக்கறிஞர் மீது புகார்

டாக்டர் சுப்பையா தாக்கப்பட்டது தொடர்பாக அவரது உறவினர் மோகன் போலீசில் புகார் செய்தார். புகாரில், கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமத்தைச் சேர்ந்த ஆசிரியர் பொன்னுசாமி, அவரது மகன் வழக்கறிஞர் டெய்சில் உள்ளிட்டோர் தூண்டுதலின் பேரில் தாக்குதல் நடந்திருக்கலாம் என்று மோகன் கூறி இருந்தார். இதனால் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் இருந்த வழக்கறிஞர் டெய்சிலை உதவி ஆய்வாளர் சங்கரநாராயணன் கைது செய்ய முயன்றார்.

மோதல் சூழல்

இதனால் உயர் நீதிமன்ற வளாகத்தில் போலீஸாருக்கும், வழக்கறிஞர்களுக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது. வழக்கறிஞர்களின் புகாரைத் தொடர்ந்து உதவி ஆய்வாளர் சங்கரநாராயணன் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு விசாணையில் இருந்து வருகிறது.

கொலை வழக்காக மாற்றம்

இந்நிலையில் கடந்த 9 நாட்களாக அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த டாக்டர் சுப்பையா ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

எனவே கோட்டூர்புரம் போலீசார் கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி கொலைக்கு காரணமானவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை மாநகர காவல் துறை ஆணையர் ஜார்ஜ் உத்தரவின் பேரில் முதல்கட்டமாக கொலை செய்த கூலிப்படையை தீவிரமாக தேடி வருகின்றனர்.

டாக்டர் சுப்பையாவின் சொந்த ஊர் குமரி மாவட்டம் சாமித்தோப்பு. இவருக்கு அஞ்சுகிராமம் என்ற ஊரில் நிலம் இருந்தது. இது தொடர்பாக டாக்டருக்கும் அதே ஊரைச் சேர்ந்த பொன்னுசாமி என்பவருடைய குடும்பத்துக்கும் 1958–ம் ஆண்டு முதல் பகை இருந்து வந்தது. சமீபத்தில்தான் நீதிமன்றத்தில் டாக்டர் சுப்பையாவுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x