Published : 08 Oct 2013 09:19 PM
Last Updated : 08 Oct 2013 09:19 PM

அந்தமானில் புயல் சின்னம்: கடலூர், நாகைக்கு எச்சரிக்கை

அந்தமான் கடல் பகுதியில் புயல் சின்னம் உருவாகியுள்ள நிலையில், நாகை மற்றும் கடலூர் துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

அந்தமானில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், புயலாக மாற வாய்ப்புள்ளது. இதனால், பலத்த மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

போர்ட் பிளேயரில் இருந்து 300 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ள இந்தத் தாழ்வுமண்டலம் புயலாக மாறும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புயல், இன்றோ அல்லது நாளையோ ஆந்திரம் - ஒடிசா மாநிலங்களிடையே கரையை கடக்க வாய்ப்பு இருக்கிறது. அப்போது பலத்த காற்றுடன் கனமழை பெய்யும்.

காற்று மிகவும் பலமாக வீசும் என்பதால், அடுத்த 48 மணி நேரத்துக்கு மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திற்கு தென்கிழக்கே ஆயிரத்து 520 கி.மீட்டர் தூரத்தில் புயல் சின்னம் உருவாகி இருப்பதால், கடலூர் மற்றும் நாகை துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x