Published : 03 Mar 2017 08:14 AM
Last Updated : 03 Mar 2017 08:14 AM
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட குழந்தை பத்திரமாக மீட்கப்பட் டது. கடத்திய குழந்தையை அதன் வீட்டருகே விட்டுவிட்டு தப்ப முயன்ற பெண்ணை அப்பகுதி யினர் சுற்றிவளைத்துப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். அவரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை கொடுங்கையூர் முத்தமிழ் நகரை சேர்ந்தவர் பரக்கத் (36). இவரது மனைவி உசேனா பானு (33), தைராய்டு பிரச்சினைக்கு சிகிச்சை பெறுவதற் காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு நேற்று முன் தினம் காலை வந்தார். தனது மூன்றரை வயது மகன் முகமது ஆசிப்பையும் தூக்கி வந்திருந்தார்.
மருத்துவரைப் பார்க்க அவரது அறைக்குள் சென்றபோது, மகன் ஆசிப்பை வெளியில் விட்டுச் சென்றார். மருத்துவரைப் பார்த்து விட்டு, வெளியே வந்தபோது, அங்கு ஆசிப்பை காணவில்லை. மருத்துவமனை வளாகம் முழு வதும் தேடியும் கிடைக்காததால், அங்குள்ள புறக்காவல் நிலை யத்தில் உசேனா பானு புகார் கொடுத்தார்.
மருத்துவமனையின் முகப்பு பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அதில், குழந்தை ஆசிப்பை ஒரு பெண் கையைப் பிடித்து அழைத்துச் செல்வதும், பின்னர் ஆட்டோவில் ஏறிச் செல்வதும் பதிவாகி இருந்தது. அதை வைத்து போலீஸார் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், நேற்று பிற்பகல் 2 மணி அளவில் கொடுங்கையூர் முத்தமிழ் நகருக்கு குழந்தையுடன் ஒரு பெண் வந்தார். அங்குள்ள டீக்கடை அருகே குழந்தையை விட்டுவிட்டு தப்பி ஓடினார். டீக்கடையில் இருந்தவர்கள் சந்தேகம் அடைந்து, அந்த பெண்ணை சுற்றிவளைத்துப் பிடித்தனர். இதுகுறித்து போலீஸா ருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். கொடுங்கையூர் போலீஸார் விரைந்து வந்து அந்த பெண்ணை கைது செய்து, வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அந்த குழந்தைதான் ஸ்டான்லியில் கடத்தப்பட்ட ஆசிப் என்பதும் தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:
குழந்தையைக் கடத்திய பெண் ணின் பெயர் சுபாஹனி (43). எண்ணூர் காமராஜர் நகர் 7-வது தெருவில் வசிக்கிறார். இவரது கணவர் முகமது சுல்தான் இறந்து விட்டார். இவர்களது பெண் குழந்தை, உறவினர் வீட்டில் வளர்கிறது. சுபாஹனி மூச்சுத் திணறல் பிரச்சினைக்கு சிகிச்சை பெற ஸ்டான்லிக்கு வந்துள்ளார். அப்போது, தனியாக விளையாடிக் கொண்டிருந்த குழந்தை ஆசிப்பை பார்த்துள்ளார். குழந்தையும் நன்றாக பேசியதால், பொம்மை, தின்பண்டங்கள் வாங்கித் தருவ தாக ஆசைகாட்டி குழந்தையை தன்னுடன் அழைத்துச் சென்றார்.
குழந்தை ஆசிப்புடன் ஒரு ஆட்டோவில் ஏறி மூலக்கொத் தளம் சென்றார். பின்னர் தண்டை யார்பேட்டை வந்து ஆசிப்புக்கு சாப்பாடு வாங்கி கொடுத்துள்ளார். அங்கிருந்து கும்மிடிப்பூண்டிக்கு புறநகர் மின்சார ரயிலில் சென் றுள்ளார். கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்திலேயே ஆசிப்புடன் இரவு படுத்து தூங்கியுள்ளார்.
மறுநாள் (நேற்று) காலை குழந்தையுடன் தனது வீட்டுக்கு சென்றிருக்கிறார். தனியாக வசித்த சுபாஹனி ஒரு குழந்தை யுடன் வந்ததைப் பார்த்து அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்தனர். ‘பத்திரிகை, தொலைக்காட்சிகளில் குழந்தை கடத்தப்பட்டுள்ளதாக செய்தி வருகிறது. இந்த குழந்தை யார்? எங்கிருந்து கடத்தி வந்தாய்?’ என்றும் கேட்டுள்ளனர். குழந்தையுடன் வீட்டுக்குள் நுழையக் கூடாது என்று வீட்டின் உரிமையாளர் கூறியுள்ளார். பயந்துபோன சுபாஹனி, கொடுங்கையூர் முத்தமிழ் நகர் பகுதியில் குழந்தையை திரும்பக் கொண்டுவந்து விட்டபோது சிக்கிக்கொண்டார்.
அவர் சற்று மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என்று தெரிகிறது. குழந்தையை வளர்ப்பதற்காக கடத்தினாரா, வேறு ஏதேனும் காரணமா? மூலக் கொத்தளம், தண்டையார்பேட்டை, கும்மிடிப்பூண்டிக்கு சுபாஹனி ஏன் சென்றார்? என்பது குறித்து அவரிடம் விசாரணை நடக்கிறது.
இவ்வாறு போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
‘ஊடகங்களுக்கு நன்றி’
கொடுங்கையூர் பகுதியில் தப்ப முயன்ற சுபாஹனியை, பத்திரிகை செய்திகள் மூலமாகவே அப்பகுதியினர் அடையாளம் கண்டு பிடித்துள்ளனர். குழந்தையின் இருப்பிடத்தையும் செய்திகள் மூலமாகவே சுபாஹனி அறிந்துகொண்டு, திரும்பக் கொண்டுவந்து விட்டுச் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
குழந்தை பத்திரமாக திரும்பக் கிடைத்த மகிழ்ச்சியில், குழந்தையின் தாய் உசேனா பானு கண்ணீர் மல்க கூறும்போது, ‘‘குழந்தையைக் காணவில்லை என்றதும் என் உயிரே போய்விட்டது. பத்திரிகை, தொலைக்காட்சி செய்தியால்தான் என் குழந்தை திரும்பக் கிடைத்திருக்கிறது. அவர்களுக்கும் போலீஸாருக்கும் நன்றி. மருத்துவமனையில் கூடுதல் பாதுகாப்பு போட வேண்டும். மருத்துவமனையை விட்டு குழந்தையுடன் யாராவது சென்றால், நுழைவுவாயிலில் நிற்கும் காவலர்கள் தீர விசாரித்து, அது அவர்களது குழந்தைதானா என்பதை உறுதி செய்த பிறகே வெளியே அனுமதிக்க வேண்டும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT