Published : 09 Mar 2014 12:00 AM
Last Updated : 09 Mar 2014 12:00 AM

விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு கூடுதலாக திருவள்ளூர் ஒதுக்கீடு

விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு கூடுதலாக திருவள்ளூர் தொகுதி வழங்கப்பட்டுள்ளது. கூட்டணியில் நீடிக்கலாமா, வெளியேறலாமா என கட்சியினருடன் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்த திருமாவளவனை அவசரமாக அழைத்து தொகுதியைக் கொடுத்தது திமுக.

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தங்களுக்கு 3 தனித் தொகுதிகளும், ஒரு பொதுத் தொகுதியும் ஒதுக்குமாறு மு.க.ஸ்டாலின் தலைமையிலான குழுவினரிடம் கோரிக்கை விடுத்தது. திமுக தலைமை அலுவலகத்தில் கடந்த செவ்வாய் மற்றும் புதன்கிழமை நடந்த பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை. ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டது.

இதற்கிடையே, கூட்டணியில் ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். திமுக கூட்டணியிலிருந்து வெளியேறி தனியாக நிற்க வேண்டும் என திருமாவளவனை வலியுறுத்தினர். இந்நிலையில் கூட்டணியில் நீடிப்பது குறித்து முடிவு செய்ய, கட்சியின் செயற்குழுக் கூட்டத்தை சனிக்கிழமை காலை அவசரமாக சென்னையில் கூட்டினார் திருமாவளவன்.

இந்நிலையில், கூட்டணியில் ஏற்பட்ட பிரச்சினையை சுமுகமாகத் தீர்க்க முடிவு செய்த திமுக தலைமை, திருமாவளவனை அவசரமாக அறிவாலயத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்தது. இதையடுத்து, அவர் செயற்குழுவில் இருந்து உடனடியாக புறப்பட்டு அறிவாலயத்துக்கு வந்தார். அங்கு திமுக பொருளாளர் ஸ்டாலின் தலைமையிலான தொகுதிப் பங்கீட்டுக் குழுவினரிடம் மீண்டும் பேச்சு நடத்தினார். இதில், உடன்பாடு ஏற்பட்டது. பின்னர் வெளியே வந்த திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:

விடுதலை சிறுத்தைகளின் உணர்வுகளை புரிந்து, கூடுதலாக ஒரு தொகுதி வழங்கிய கருணாநிதி, மு.க.ஸ்டாலின், தி.க. தலைவர் கி.வீரமணி ஆகியோருக்கு நன்றி. வலுவான திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும். கூட்டணி வெற்றிக்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் பாடுபட வேண்டும். நமக்கு வேண்டாத வர்கள் நம்மை தனிமைப்படுத்த, அதிருப்தியை ஏற்படுத்தி வேண்டாத நடவடிக்கைகளில் ஈடுபட்டது வருத்தம் அளிக்கிறது. இதுபோன்ற செயல்களுக்கு ஒருபோதும் கட்சியினர் இடம் கொடுக்கக் கூடாது.

இடதுசாரி கட்சிகள் இந்தக் கூட்டணிக்கு வரவேண்டும் என்று 6 மாதமாக வேண்டுகோள் விடுத்து வந்திருக்கிறேன். இப்போது மீண்டும் வேண்டுகோள் விடுக்கிறேன். மதவாத சக்திகளும், சாதிய சக்திகளும் வலிமை பெற்று விடக்கூடாது. டெல்லியில் மதவாத சக்திகள் ஆட்சிக்கு வந்து விடக்கூடாது. எனவே, இந்தக் கூட்டணிக்கு இடதுசாரிகள் கட்சிகள் வரவேண்டும். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x