Published : 17 Jun 2016 12:39 PM
Last Updated : 17 Jun 2016 12:39 PM

லஞ்ச விவகாரத்தில் இடைத்தரகர் சிக்கினார்: மதுரை அரசு மருத்துவமனையில் தொடரும் சஸ்பெண்ட், கைது

மதுரை அரசு ராஜாஜி மருத்துவ மனையில் ரூ.300 லஞ்சம் கொடுக் காததால் மாற்றுத்திறனாளி இளைஞர் இறந்த விவகாரம் தி இந்து நாளிதழின் உதவியால் வெளிச்சத்துக்கு வந்ததால் ஏற்கெனவே இரு ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் ஊழியர்களுக்கு லஞ்சம் பெற்றுக் கொடுப்பதில் மூளையாகச் செயல்பட்ட இடைத்தரகரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

மதுரை அரசு மருத்துவனையில் நோயாளிகள் வருகை, மருத்துவர், ஊழியர்களை கண்காணிக்க 50-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள், 45 போலீஸார் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் வார்டுகள் முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். இந்த கண்காணிப்பு, பாதுகாப்பை மீறி சமீபத்தில் ஏழை தலித் கணபதி ரூ.300 லஞ்சம் கொடுக்க மறுத்ததால் அவசர சிகிச்சைக்கு வந்த அவரது மாற்றுத்திறனாளி மகன் ராஜேந்திரபிரசாத் உயிரிழந்த சம்பவம் நடந்தது. இதுகுறித்து சுகாதாரத் துறை செயலரே விசாரணைக்கு உத்தரவிட்டதால் ஆரம்பத்தில் இந்த சம்பவத்தை மறுத்த மருத்துவமனை நிர்வாகம், அதன்பின் 2 ஊழியர்களை பெயரளவுக்கு சஸ்பெண்ட் செய்தது.

ராஜேந்திர பிரசாத் இறப்புக்கு லஞ்சம் விவகாரம் ஒரு காரணமாக இருந்தாலும், அனுமதிச்சீட்டு இல்லாமல் சிகிச்சை அளிக்க மறுத்ததும் மற்றொரு முக்கியமான காரணமாக கருதப்படுகிறது. ஆனால், மருத்துவமனை நிர்வாகம், தற்போதுவரை பணியில் இருந்த மருத்துவர், முக்கிய மருத்துவப் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. துறைவாரியான விசாரணை நடப்பதாக மட்டுமே காரணம் சொல்லப்படுகிறது. மகனை இழந்த கணபதி புகார் செய்தும் மருத்துவமனை போலீஸார் இந்த சம்பவம் தொடர்பாக எந்த வழக்கும், விசாரணையும் தொடங்காமல் இருந்தனர்.

இந்நிலையில் நேற்று மருத்துவமனை போலீஸார், இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிந்து, லஞ்சம் பெற்ற மருத்துவமனையின் முன்னாள் தினக்கூலி பணியாளர் பால்பாண்டியை கைது செய்துள்ளனர்.

பால்பாண்டி மதுரை விளாச்சேரியை சேர்ந்தவர். இவர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகள், அவரது உறவினர்களிடம் பேரம் பேசி சிகிச்சைக்கு உதவுவதாக தனக்கும், ஊழியர்களுக்கு லஞ்சம் பெற்று வந்துள்ளார். ராஜேந்திரபிரசாத்துக்கு சிகிச்சை அளிக்காத மருத்துவர், பணியில் இருந்த மற்ற ஊழியர்களிடம் விசாரிக்க போலீஸார் தற்போது முடிவு செய்துள்ளனர். அதனால், மருத்துவமனை வட்டாரத்தில் தொடர்ந்து சஸ்பெண்ட், கைது தொடர வாய்புள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மருத்துவமனையில் பணியாற்றும் சில மருத்துவர்கள், பணியாளர்கள் கூறியது:

மருத்துவமனையில் அனைத்து நிலைக ளிலும் நடக்கும் லஞ்ச விவகாரத்துக்கு இடைத்தரகர்களே முக்கிய காரணம். அவர்கள், மருத்துவமனை ஊழியர்கள் போலவே வார்டுகளில் நடமாடுகின்றனர். மருத்துவமனை கண்காணிப்பு கேமராக்களை போலீஸாரும், மருத்துவமனை நிர் வாகமும் கண்காணிக்காததால் இவர் களும், ஊழியர்களும் தைரியமாக நோயாளிகளின் உறவினர்களிடம் லஞ்சம் கேட்கத் தொடங்கியுள்ளனர்.

கண் காணிப்பு கேமராக்கள் வைப்பதோடு மட்டுமே மருத்துவமனையின் கடமை முடிந்துவிடவில்லை. அதை கண்காணித்து எந்தெந்த வகைகளில் நோயாளிகளிடம் ஊழியர்கள் அத்துமீறல் தொடர்கிறது என்பதைக் கண்டறிந்து நடவடிக்கை வேண்டும். அப்போதுதான் ஊழியர்கள் தாங்கள் கண்காணிக்கப்படுகிறோம் என்ற அச்சத்திலாவது நோயாளிகளிடம் கனிவுடனுடன் நடந்துகொள்வர். சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஊழியர்கள், கைதான இடைத்தரகரிடம் விசாரித்தால் இதில் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ள முடியும் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x