Published : 20 Jan 2017 08:14 AM
Last Updated : 20 Jan 2017 08:14 AM

ஜல்லிக்கட்டு வழக்கு நிலுவையில் இருப்பதால் சிக்கல்: தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு மோடி ஆதரவு - டெல்லியிலேயே தங்கி சட்ட நிபுணர்களுடன் முதல்வர் ஓபிஎஸ் ஆலோசனை

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையால் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் உடனடியாக எதுவும் செய்ய முடியாது. ஆனால், இதுதொடர்பாக தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு துணை நிற்கும் என முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளார்.

பிரதமருடனான சந்திப்பைத் தொடர்ந்து டெல்லிலேயே தங்கி யுள்ள முதல்வர் ஓபிஎஸ், சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

உச்ச நீதிமன்றம் தடை விதித்த தால் தமிழகத்தின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டுப் போட்டி, கடந்த 2 ஆண்டுகளாக நடத்தப்படவில்லை. இந்த ஆண்டாவது ஜல்லிக்கட்டு நடக்கும் என தமிழக மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், வழக்கில் உடனடியாக தீர்ப்பு வழங்க உச்ச நீதிமன்றம் மறுத்ததாலும், மத்திய அரசு அவசரச் சட்டம் இயற்றாததாலும் இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு நடக்கவில்லை.

இந்நிலையில், ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரியும் பீட்டா அமைப்பை தடை செய்ய வலியுறுத் தியும் தமிழகம் முழுவதும் இளை ஞர்கள், மாணவர்கள் தீவிர போராட்டம் நடத்தி வருகின்றனர். லட்சக்கணக்கானோர் தன்னெழுச் சியுடன் போராட்டத்தில் பங்கேற்றுள் ளனர். சென்னை மெரினா கடற்கரை, மதுரை தமுக்கம் மைதானம், அலங்காநல்லூர், கோவை, திருச்சி என பல்வேறு இடங்களில் கடந்த 3 நாட்களாக இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட் டுள்ளனர்.

சென்னை மெரினாவில் 2 ஆயிரம் பேருடன் தொடங்கிய போராட்ட களம், நேற்று ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்களால் நிரம்பி வழிந்தது. அமைச்சர்கள், காவல் துறை அதிகாரிகள் நடத்திய பலகட்ட பேச்சுவார்த்தைகளில் பலனில்லை. இதைத் தொடர்ந்து பிரதமர் மோடியை சந்தித்துப் பேச உள்ளதாக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று முன்தினம் அறிவித்தார். அதன்பின், போராட்டக் குழுவினரை தனது இல்லத்துக்கு வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்திவிட்டு, நேற்று முன்தினம் இரவே டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

டெல்லியில் நேற்று காலை 10.30 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்துப் பேசினார். அப்போது தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர். ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி தமிழகத்தில் நடந்து வரும் போராட்டத்தின் தீவிரத் தையும், லட்சக்கணக்கான மாண வர்கள், இளைஞர்கள் திரண்டுள்ள தையும் பிரதமர் மோடியிடம் முதல்வர் எடுத்துரைத்தார். தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப் பளித்து, ஜல்லிக்கட்டு போட்டியை உடனடியாக நடத்துவற்கு வசதியாக அவசரச் சட்டம் இயற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இந்த சந்திப்பு குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

ஜல்லிக்கட்டு நடத்த உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது தொடர்பாக தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் விவாதித் தோம். ஜல்லிக்கட்டு நம் கலாச் சாரத்தின் அடையாளமாகும். இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத் தில் நிலுவையில் இருப்பதால் உடனடியாக எதுவும் செய்ய இயலாத நிலை உள்ளது.

ஜல்லிக்கட்டுக்காக தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு துணை நிற்கும். தமிழக அரசு மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளுக்கும் மத்திய அரசு தன்னால் இயன்ற சாதகமான உதவிகளைச் செய்யும் என முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் உறுதி அளித்துள்ளேன்.

இவ்வாறு மோடி தெரிவித் துள்ளார்.

இது தொடர்பாக நிருபர்களிடம் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:

ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி தமிழகத்தில் நடைபெற்று வரும் போராட்டங்களின் தீவிரம் குறித்து பிரதமரிடம் விரிவாக எடுத்துக் கூறினேன். உச்ச நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டுள்ள ஜல்லிக் கட்டு போட்டியை மீண்டும் நடத்த உடனடியாக அவசரச் சட்டம் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தினேன். இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளரும் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளதை சுட்டிக்காட்டினேன்.

ஜல்லிக்கட்டு நம் கலாச்சாரத் தின் அடையாளம் என குறிப்பிட்ட பிரதமர், தமிழர்களின் உணர்வு களை மதிப்பதாக தெரிவித்தார். ஜல்லிக்கட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்னும் தீர்ப்பு வழங்கவில்லை. எனவே, உடனடி யாக எதுவும் செய்ய வாய்ப்பில்லை என அவர் தெரிவித்தார். ஆனால், ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் என பிரதமர் உறுதி அளித்தார்.

எனவே, ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க மத்திய அரசின் உதவியுடன் நடவடிக்கை எடுக்கப் படும். ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசின் செயல்பாடுகளை விரைவில் காண்பீர்கள். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது எங்கும் தடியடி நடத்தப்படவில்லை.

மேலும், புயல் மற்றும் வறட்சி நிவாரண நிதி தொடர்பாகவும் பிரதமரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. வறட்சிப் பகுதி களை பார்வையிட்டு ஆய்வு செய்ய விரைவில் மத்தியக் குழு அனுப்பப்படும் என பிரதமர் உறுதி அளித்தார்.

இவ்வாறு முதல்வர் தெரிவித் தார்.

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பிரதமரை சந்தித்துவிட்டு உடனடி யாக சென்னை திரும்புவதாக இருந்தது. ஆனால், திடீரென தனது பயணத்தை ரத்து செய்த ஓபிஎஸ், டெல்லிலேயே தங்கியுள்ளார். ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர் பாக சட்ட நிபுணர்களுடன் அவர் தீவிர ஆலோசனை நடத்தினார். ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்வது குறித்து ஆலோசனை நடத்தப் பட்டதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன.

எம்.பி.களுக்கு அனுமதியில்லை

ஜல்லிக்கட்டு பிரச்சினைக்காக பிரதமரை சந்திக்கப் போவதாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று முன்தினம் அறிவித்தார். இதைத் தொடர்ந்து, அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவும் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், ‘அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமரை சந்தித்து ஜல்லிக்கட்டு தொடர்பாக வலியுறுத்துவர்’ என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நேற்று காலை டெல்லியில் பிரதமரை ஓ.பன்னீர் செல்வம் சந்தித்துப் பேசினார். ஆனால், அதிமுக எம்.பி.க்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x