Published : 17 Aug 2016 09:48 AM
Last Updated : 17 Aug 2016 09:48 AM

ரயிலில் நடந்த கொள்ளை தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் கேரளாவில் விசாரணை

ஓடும் ரயிலில் ரூ.5 கோடியே 75 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் கேரளாவில் விசாரணை நடத்தியுள்ளனர்.

சேலத்திலிருந்து கடந்த 8-ம் தேதி இரவு சென்னை எழும்பூர் வந்த ரயிலில் இருந்து ரூ.5 கோடியே 75 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகிறார்கள். முதல் கட்டமாக சேலம், சென்னையில் உள்ள வங்கி ஊழியர்கள், ரயில்வே பணியாளர்கள், பணக்கட்டுகளை ரயிலில் ஏற்றிய தொழிலாளர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸாரிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

ஓடும் ரயிலில் கொள்ளையடிக்க வாய்ப்பு இல்லை. எனவே, ரயிலின் மேற்கூரையை ஏற்கெனவே திட்டமிட்டு லேசாக உடைத்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பின்னர் வேறு ஒரு இடத்தில் வைத்து பணத்தை கொள்ளையடித்து மூட்டை கட்டி சென்றிருக்க வேண்டும் என்று தனிப்படையினர் சந்தேகிக்கின்றனர். இந்த கொள்ளையில் குறைந்தது 5 பேராவது ஈடுபட்டிருக்க வேண்டும் என்றும் கருதப்படுகிறது. எங்கு வைத்து ரயிலின் மேற்கூரை உடைக்கப்பட்டது? எங்கு வைத்து கொள்ளையடிக்கப்பட்டது என்பது போன்ற தகவல்கள் உறுதி செய்யப்பட்டால் குற்றவாளியை விரைவில் கைது செய்து விடலாம் என தனிப்படையினர் நம்புகின்றனர்.

பணம் கொண்டுவர பயன்படுத்தப்பட்ட ரயில் பெட்டி 5-ம் தேதி கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் நிறுத்தப்பட் டுள்ளது. அதன் பிறகு சேலத்துக்கு அது கொண்டு வரப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து முதல் கட்டமாக தமிழக சிபிசிஐடி போலீஸார் எர்ணாகுளத்துக்கு சென்று அங்குள்ள பணிமனையில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். சம்பந்தப்பட்ட ரயில் பெட்டி நின்றிருந்தபோது அங்கு பணியில் இருந்த அதிகாரிகள், ஊழியர் களின் பட்டியலை எடுத்துள்ளனர்.

தொடர்ந்து அவர்களின் செல்போன் எண்ணையும், அவர்கள் யாரிடமெல்லாம் பேசியுள்ளனர் என்ற தகவலையும் சேகரித்துள்ளனர். அங்கு போலீஸாருக்கு நம்பிக்கையூட்டும் வகையில் சில தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x