Last Updated : 22 Feb, 2014 12:00 AM

 

Published : 22 Feb 2014 12:00 AM
Last Updated : 22 Feb 2014 12:00 AM

நாடாளுமன்றத் தேர்தல்: தமிழகத்தில் ஒரே கட்ட வாக்குப்பதிவு

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலை ஒரே கட்டமாக நடத்துவதற்கு மத்திய தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான அறிவிக்கையை மத்திய தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிட உள்ளது. எந்தெந்த மாநிலத்தில் எத்தனை கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்ற விவரங்களும் வெளியிடப்படும்.

ஒவ்வொரு மாநிலத்துக்கும் மத்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் சென்று, அங்குள்ள தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டங்களை நடத்தினர்.

தமிழக தேர்தல் ஏற்பாடுகள் குறித்து சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய துணை தேர்தல் ஆணையர் பி.கே.தாஸ் கலந்துகொண்டு, அரசியல் கட்சிகளிடம் கருத்து கேட்டார். பெரும்பாலான கட்சிகள் தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டன. அதன்பிறகு, டெல்லியில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் தமிழக அரசியல் கட்சிகள் ஒருகட்டத் தேர்தலையே விரும்புவதாக கருத்து தெரிவித்திருந்தன.

இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த திட்டமிட்டிருப்பதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x