Published : 01 Sep 2016 03:00 PM
Last Updated : 01 Sep 2016 03:00 PM
என்.ஆர்.காங்கிரஸ் தொடர் புறக்கணிப்பை அடுத்து பேரவை நிகழ்வுகளில் பங்கேற்க சபாநாயகர் அழைப்பு விடுத்துள்ளார்.
புதுச்சேரியில் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு கடந்த 3 நாட்களாக எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் புறக்கணிப்பில் உள்ளது.
என்.ஆர்.காங்கிரஸ் கட்சி 3வது நாளாக இன்றும் சட்டப்பேரவை நிகழ்வுகளில் பங்கேற்கவில்லை. இதனால் பட்ஜெட் விவாதத்தில் எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் முழுவதும் பங்கேற்கவில்லை. மூன்றாவது நாளாக பட்ஜெட் விவாதம் தொடர்ந்தது.
அப்போது திமுக உறுப்பினர் சிவா, ''புதுச்சேரியில் எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் பேரவைக்கு வர வேண்டும்'' என்று அறிவுறுத்தினார். இதுதொடர்பாக சபாநாயகர் அறிவுறுத்தவும் கோரினார். ஆனால், சபாநாயகர் எக்கருத்தையும் தெரிவிக்கவில்லை. அப்போது இதில் அதிமுகவின் கருத்து என்ன என்று கேள்வி எழுப்பினார்.
ஆனால், அதிமுக சட்டப்பேரவைக்குழுத்தலைவர் அன்பழகன், "கோரிக்கை விடுப்பது எங்கள் பணியல்ல" என்று குறிப்பிட்டார்.
இந்நிலையில் பட்ஜெட் விவாதத்துக்கு பதில் அளித்து முதல்வர் நாராயணசாமி பேசுகையில், "எதிர்க்கட்சியினர் பேரவையை தவிர்க்கிறார்கள். சபாநாயகர் அவர்களை பேரவைக்கு வரக்கூறி அறிவித்தால் நல்லதாக இருக்கும். நாங்கள் கேட்பதை விட சபாநாயகர் அறிவிக்கலாம். எதிர்க்கட்சிகள் ஜனநாயகத்துக்கு அவசியம். வளர்ச்சிக்கு ஒன்றுசேர்ந்து பாடுபடுவோம்" என்றார்.
அதைத்தொடர்ந்து சபாநாயகர் வைத்திலிங்கம் கூறுகையில், " முதல்வர் , திமுக எம்எல்ஏ சிவா ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் எதிர்க்கட்சியாக இருக்கும் என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பேரவைக் கூட்டத்தில் பங்கு பெற அழைப்பு விடுக்கிறேன்" என்று குறிப்பிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT