Last Updated : 19 Feb, 2014 12:00 AM

 

Published : 19 Feb 2014 12:00 AM
Last Updated : 19 Feb 2014 12:00 AM

அதிமுக அணியில் தலித் கட்சிகளை சேர்க்க முயற்சி- முன்னாள் எம்.எல்.ஏ. முருகவேல்ராஜன் ஆதரவு

தலித் கட்சிகளான விடுதலை சிறுத்தைகளும் புதிய தமிழகமும் திமுக கூட்டணியில் தங்களுக்கான இடத்தை உறுதி செய்திருக்கும் நிலையில் அதிமுக அணியிலும் தலித் கட்சிகளை சேர்க்க ஆளும் கட்சி தரப்பில் முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கடந்த 11-ம் தேதி மதுரையில், பாமக முன்னாள் எம்.எல்.ஏ-வும் மக்கள் விடுதலைக் கட்சித் தலைவருமான முருகவேல்ராஜனும், அமைச்சர் செல்லூர் ராஜூம் சந்தித்துப் பேசினர். இதைத் தொடர்ந்து, திங்கள்கிழமை சென்னையில் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனை சந்தித்துப் பேசினார் முருகவேல் ராஜன். அப்போது, அதிமுக அணியில் இணைந்து பணியாற்ற விரும்புவது குறித்து ஜெயலலிதாவுக்கு தான் எழுதிய கடிதத்தையும் அமைச்சரிடம் கொடுத்திருக்கிறார் முருகவேல் ராஜன்.

இதுபற்றி முருகவேல் ராஜனிடம் கேட்டபோது, “தேவேந்திரகுல வேளாளர்களின் சமுதாயக் கொடியை, அபகரித்துக் கொண்டு தலித் கட்சி என்ற பெயரில் தன்னை மட்டுமே வளப்படுத்திக் கொண்டவர் டாக்டர் கிருஷ்ணசாமி. தாமி ரபரணி ஆற்றில் தலித்துகள் 17 பேர் நீரில் மூழ்கிச் சாவதற்குக் காரணமான திமுக-வுடன் கிருஷ்ணசாமி கைகோத்திருப்பது முழுக்க முழுக்க சந்தர்ப்ப வாதம். இலங்கைத் தமிழர் பிரச் சினைக்காக குரல் கொடுக் கும் புதிய தமிழகமும், விடுதலை சிறுத்தைகளும் காங்கிரஸுக்கு உதவியாக இருந்த திமுகவை ஆதரிப்பது அபத்தமாக இருக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-விடம் இரண்டு சீட்களைப் பெற்ற கிருஷ்ணசாமி, ஒன்றை தனக்காக வைத்துக் கொண்டு இன்னொன்றில், கட்சிக்கு சம்பந்தமில்லாத ஒருவரை நிறுத்தினார். இப்போது, நாடாளுமன்றத் தேர்தலிலும் திமுக-விடம் ஒரு சீட்டை பெற்று அதிலும் தனது குடும்பத்தைச் சேர்ந்தவரைத்தான் நிறுத்தப்போகிறார். அவருக்கு சமுதாயத்தின் மீதோ கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் மீதோ அக்கறை கிடையாது. சந்தர்ப்பவாத அரசியல் நடத்தும் கிருஷ்ணசாமியை வீழ்த்து வதற்காகவே நாங்கள் அதிமுக அணியில் சேரும் முடிவுக்கு வந்தோம்” என்றார்.

இதேபோல், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியனும் மீண்டும் அதிமுக-வோடு கைகோக்கக் கூடும் என்று சொல்கிறார்கள். இதுகுறித்து ஜான்பாண்டியனிடம் கேட்டதற்கு, “இதுவரையில் எங்களோடு அதிமுக எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்த வில்லை. ஒருவேளை அவர்கள் எங்களை அழைத்தால் கட்சியின் பொதுக் குழுவைக் கூட்டி முடிவு செய்வோம்” என்றார்.

2001 சட்டமன்றத் தேர்தலில் ஜான் பாண்டியன் அதிமுகவுடன் கூட்டணி வைத்து சென்னை எழும்பூர் தொகுதியில் போட்டியிட்டவர் என்பது குறிப் பிடத்தக்கது. ஆனால், இந்த இவ் விரு கட்சிகளுமே பரமக்குடி துப் பாக்கிச் சூட்டை கடுமையாக விமர்சித்த கட்சிகள் என்பதால், அதிமுகவுடனான இவர்களது கூட்டணியை தலித் மக்கள் ஏற்பார்களா? என்பது தேர்தல் நெருக்கத்தில்தான் தெரியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x