Last Updated : 20 Apr, 2017 03:30 PM

 

Published : 20 Apr 2017 03:30 PM
Last Updated : 20 Apr 2017 03:30 PM

குழாய் வழியாக மது விநியோகம் செய்யலாமா?- மதுபான பிரியர்களுக்காக வாதாடிய வழக்கறிஞரை சாடிய நீதிபதி

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதால் குடிமகன்கள் மது வாங்க வரிசையில் நிற்பதாக வருத்தப்பட்ட அரசு வழக்கறிஞரிடம், குழாய் வழியாக மது விநியோகம் செய்யலாமா? என எதிர்கேள்வி கேட்டு திணற வைத்தார் நீதிபதி.

தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் தொலைவிற்குள் இருக்கும் மதுபான கடைகளை நிரந்தரமாக மூடுவதற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவால் தமிழகம் முழுவதும் சுமார் 3000 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.

இந்த உத்தரவுக்கு முன்பு தமிழகத்தில் மதுக்கடைகள் இல்லாத ஊர்களே இல்லை என்ற நிலை இருந்தது. தடுக்கி விழுந்தால் டாஸ்மாக் கடை போல், ஒரே ஊரில், ஒரே தெருவில் ஒன்றுக்கு மேற்பட்ட கடைகள் என இருந்தது. தற்போது தாலுகாவுக்கு ஒரு டாஸ்மாக் கடை என்றளவில் கடைகளின் எண்ணிக்கை சுருங்கிவிட்டது.

டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை குறைந்ததால் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.5 ஆயிரம் கோடி வரை வருவாய் இழப்பு ஏற்படும் என கணக்கிடப்பட்டுள்ளது.

இதை சரி செய்ய புதிய இடங்களில் கடைகளை திறக்க அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். இப்போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதனால் புதிதாக டாஸ்மாக் கடைகளை திறக்க முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர். உயர் நீதிமன்றத்தில் புதிய டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக வழக்குகள் குவிந்து வருகின்றன.

இந்த சூழலில் அண்மையில் கருவேல மர விழிப்புணர்வு புத்தக வெளியிட்டு விழா உயர் நீதிமன்ற கிளையில் நிர்வாக நீதிபதி ஏ.செல்வம் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வழக்கறிஞர்கள் திரளாக பங்கேற்றனர். டாஸ்மாக் நிறுவனத்துக்காக நீதிமன்றத்தில் ஆஜராகி வரும் வழக்கறிஞரும் அங்கிருந்தார்.

நீதிபதியுடன் வழக்கறிஞர்கள் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டனர். அப்போது நீதிபதியிடம், ரெம்ப கஷ்டமாக இருக்கு லார்ட்ஷிப் (நீதிபதி), சரக்கு வாங்கு மக்கள் நீண்ட வரிசையில் கால்கடுக்க நிற்பதைப் பார்த்தால் வேதனையாக இருக்கு’ என டாஸ்மாக் வழக்கறிஞர் தெரிவித்தார்.

உடனே அவர் பக்கம் திரும்பிய நீதிபதி, ‘ஒன்று செய்யலாம், குழாய் மூலம் மதுவை அனுப்பி குடிக்க வைக்கலாமா? என எதிர்கேள்வி கேட்டதும் அமைதியானர் அரசு வழக்கறிஞர். பிற வழக்கறிஞர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x