

குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய் மற்றும் இரண்டு அடி நீளக் கரும்புத் துண்டு ஆகியவை அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை தமிழக மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில், அரிசி குடும்ப அட்டை உடைய குடும்ப அட்டைதாரர்கள், காவலர் குடும்ப அட்டை பெற்றுள்ள காவலர் குடும்பங்கள் மற்றும் முகாம்களில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர் குடும்பங்கள் ஆகியோருக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய் மற்றும் இரண்டு அடி நீளக் கரும்புத் துண்டு ஆகியவை அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் பொங்கல் பரிசுத் தொகுப்பு பொங்கல் திருநாளுக்கு முன்னரே சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்படும். இதன் மூலம் 1 கோடியே 80 லட்சம் குடும்பங்கள் பயன்பெறுவர். ஏழை, எளிய, சாமானிய மக்கள் பொங்கல் பண்டிகையை சீரோடும், சிறப்போடும் கொண்டாட இது வழிவகுக்கும்'' என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.