Published : 25 Jun 2017 10:20 AM
Last Updated : 25 Jun 2017 10:20 AM

சர்க்கரை நோய் காரணமாக நாடு முழுவதும் 6 கோடியே 90 லட்சம் பேர் பாதிப்பு: அப்போலோ மருத்துவமனை தகவல்

நாடுமுழுவதும் சர்க்கரை நோயால் 6 கோடியே 90 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அப்போலோ மருத்துவமனையின் செயல் துணைத் தலைவர் பிரீத்தா ரெட்டி தெரி வித்தார்.

அப்போலோ மருத்துவமனை சார்பில் சர்க்கரை நோய் குறித்த 2 நாள் சர்வதேச கருத்தரங்கம் சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் நேற்று தொடங்கியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த சர்க்கரை நோய் நிபுணர்கள் கருத்தரங்கில் பங்கேற்றுள்ளனர்.

இந்த சர்வதேச கருத்தரங்கு குறித்து அப்போலோ மருத்துவமனையின் செயல் துணைத் தலைவர் பிரீத்தா ரெட்டி சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்தியாவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. சர்க்கரை நோயால் 6 கோடியே 90 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 கோடி பேர் சர்க்கரை நோய் வருவதற்கான ஆரம்ப நிலையில் உள்ளனர். சர்க்கரை நோய் மற்றும் அது சார்ந்த பிரச்சினைகளால் 13 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். சர்க்கரை நோய் இதயம், சிறுநீரகம், கண்கள் உள்ளிட்ட உறுப்புகளை தாக்குகிறது.

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட இருப்பதை 70 சதவீதம் பேருக்கு முன்கூட்டியே கண்டுபிடிக்க முடியும். சர்க்கரை நோய் சிகிச்சையில் நவீன தொழில்நுட்பம், பிற உறுப்புகள் பாதிக்கப்படுவதை தடுத்தல், விரைவில் நோய் கண்டறிதல் உள்ளிட்ட சர்க்கரை நோய் குறித்த பல்வேறு அம்சங்கள் குறித்து கருத்தரங்கில் விவாதிக்கப்படுகிறது. சர்க்கரை நோயின் பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டிய நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

இதற்காக நாடுமுழுவதும் 55 அப்போலோ சர்க்கரை நோய் சிகிச்சை மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. 2.5 லட்சம் பேருக்கு சர்க்கரை நோய் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. 6 லட்சம் பேருக்கு சர்க்கரை நோய் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் சர்க்கரை நோய் பாதிப்பு இருந்த 1.5 லட்சம் பேருக்கு உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x