Published : 01 Mar 2017 11:47 AM
Last Updated : 01 Mar 2017 11:47 AM
சேலம் அருகே அதிமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்த வீரபாண்டி தொகுதி அதிமுக பெண் எம்எல்ஏ மனோன்மணிக்கு எதிராக பொதுமக்கள் கறுப்புக் கொடி காட்டினர்.
அதிமுக பொதுச் செயலாளராக சசிகலாவை தேர்வு செய்ததற்கும், தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்த எம்எல்ஏ-க்களுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சேலம் மாவட்டம் வீரபாண்டி தொகுதிக்கு உட்பட்ட சர்க்கார் கொல்லப்பட்டி பகுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு, அதிமுக பொதுக்கூட்டம் நடந்தது.
பொதுக்கூட்டத்தில் பங்கேற்க சசிகலா அணியைச் சேர்ந்த வீரபாண்டி சட்டப்பேரவை தொகுதி எம்எல்ஏ மனோன்மணி பங்கேற்க வந்தார்.
அப்போது அங்கு திரண்ட பொது மக்கள் மற்றும் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள், திடீரென மனோன்மணிக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக் கொடி காட்டினர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் பொதுமக்களிடம் இருந்த கறுப்பு கொடியை பிடுங்கி அப்புறப்படுத்த முயன்றனர்.
ஆனால், அங்கிருந்து செல்ல மறுத்த பொதுமக்கள், அதிமுக கூட்டம் நடைபெற்ற பகுதிக்கு அருகில் நின்று மீண்டும் கறுப்பு கொடியை காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர் களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும்போது, ‘‘தேர்தலில் போட்டி யிடும் போது வாக்கு கேட்டு பொது மக்களிடம் வந்த சட்டப்பேரவை உறுப்பினர், தற்போது முதல்வரை தேர்ந்தெடுக்கும்போது மக்களின் விருப்பத்தை கேட்காமல், கூவத்தூரிலேயே தங்கி எடப்பாடி பழனிசாமியை தேர்ந்து எடுத்ததை ஏற்று கொள்ள மாட்டோம். மக்களை ஏமாற்றிய சட்டப்பேரவை உறுப்பினர் தங்களது தொகுதிக்குள் இனி வரக்கூடாது,’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT