Published : 08 Nov 2013 12:00 AM
Last Updated : 08 Nov 2013 12:00 AM

தர்மபுரி கலவர கிராமங்களில் தடையை மீறி உண்ணாவிரதம்

தருமபுரியில் கலவரப் பாதிப்புக்கு ஆளான கிராமங்களில் நேற்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொள்ளப்பட்டது. தடையை மீறி உண்ணாவிரதம் இருந்த அவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தருமபுரி மாவட்டம் நாயக்கன்கொட்டாய் பகுதியில் கடந்த ஆண்டு நவம்பர் 7-ம் தேதி இளவரசன் –திவ்யா கலப்புத் திருமணம் செய்துகொண்டனர். அப்போது திவ்யாவின் தந்தை தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவங்களின் எதிரொலியாக வன்முறை வெடித்தது. நத்தம், அண்ணா நகர், கொண்டம்பட்டி ஆகிய மூன்று கிராமங்களில் வீடுகள் சேதப்படுத்தப்பட்டது. இந்தச் சம்பவம் நடந்து நேற்றுடன் ஓராண்டு முடிகிறது.

இந்நிலையில் நேற்று பாதிப் புக்கு ஆளான மூன்று கிராம மக்களும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருநாள் அடையாள உண்ணா விரதம் இருந்தனர். மூன்று கிராமங்களிலும் தனித்தனியாக உண்ணாவிரதம் மேற்

கொள்ளப்பட்டது. மூன்று இடங்களிலும் சேர்த்துச் சுமார் 250 பேர் உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டனர். கலவரத்தில் வீடுகளை இழந்தவர்களுக்கு விரைவாக வீடு கட்டித்தரப்பட வேண்டும், மறுவாழ்வுக்கு வங்கிக்கடன் வழங்க வேண்டும் என்ற நிபந்தனைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் மேற்கொள்ள ப்பட்டது. 144 தடை உத்தரவு மாவட்டம் முழுவதிலும் அமலில் உள்ள நிலையில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி மறுக்கப்பட்டது. இருப்பினும் மூன்று கிராம மக்களும் உண்ணாவிரதம் மேற்கொள்ளத் திரண்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் ஏராளமான காவல்துறையினர் அந்தப் பகுதியில் குவிக்கப்பட்டனர்.

பெரும்பாலான வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்றப்பட்டிருந்தது. காவல்துறையினர் இந்தக் கொடிகளை அகற்றினர். நத்தம் கிராமத்தில் உண்ணாவிரதம் துவங்கிய போது கலவரத்திற்குப் பிறகு நடந்த உண்ணாவிரதத்தில் மயங்கி விழுந்து இறந்துபோன மாற்றுத்திறனாளி மங்கம்மாள், இளவசரன் ஆகியோரது படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மூன்று கிராமக் குழந்தைகளும் பள்ளி களுக்கு விடுப்பு எடுத்துக்கொண்டு உண்ணாவிரதத்தில் பங்கெடுத்தனர். மூன்று கிராமங்களிலும் சாதியக் கொடுமைகளுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. மூன்று கிராம மக்களும் அமைதியான வழியில் உண்ணாவிரதம் மேற்கொண்டபோதும் தடையுத்தரவை மீறியதாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x