Published : 11 Jan 2017 09:12 AM
Last Updated : 11 Jan 2017 09:12 AM
18 வயதுக்குட்பட்ட மாணவர்கள் மதுபோதைக்கு அடிமையா வதைத் தடுக்க டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் பார்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தக்கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கில், தமிழக அரசு 4 மாதங்களில் பரிசீலித்து முடிவு எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் சமூக நீதிக்கான வழக்கறிஞர்கள் பேரவையின் தலைவர் வழக்கறிஞர் கே.பாலு தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழகம் முழுவதும் 6 ஆயிரத்து 181 மதுபானக் கடைகளும், 3 ஆயிரத்து 76 பார்களும் உள்ளன. இவை அனைத்தும் டாஸ்மாக் நிர்வாகத்தின் கீழ் உள்ளன. இந்த மதுபானக் கடைகளில் ஏராள மான முறைகேடுகள் நடைபெற்று வருகிறது. சட்டவிரோத மது பானங்கள், தரமற்ற உணவு வகைகள் அதிக விலைக்கு இங்குள்ள பார்களில் விற்கப்படு கிறது. குறிப்பாக 18 வயதுக் குட்பட்ட சிறுவர்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கும் கூட தடையின்றி மதுபானங்களை சப்ளை செய்கின்றனர்.
ஆனால் அந்த மதுபான கடைகளுக்கு முன்பு 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மது பானங்கள் விற்பனை செய்யப் படமாட்டாது என டாஸ்மாக் நிறுவனம் விளம்பர பலகைகள் வைத்துள்ளது. அப்படியி ருந்தும் சிறுவர்களுக்கு மது பானங்கள் விற்பனை செய்யப் படுகின்றன.
எனவே மதுபான கடைகள் மற்றும் பார்களின் எல்லாப் பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டால் மட்டுமே இதுபோன்ற சட்டவிரோத செயல்களை அறவே இல்லாமல் தடுக்க முடியும். மேலும் இந்த கண்காணிப்பு கேமராக்கள் அன்றாட நிர்வாகத்துக்கும் உதவி யாக இருக்கும். இதுதொடர்பாக கடந்த நவ.23-ல் தமிழக அரசுக்கும், டாஸ்மாக் நிறுவனத்துக்கும் கோரிக்கை மனு அனுப்பியும், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.
எனவே தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடை களிலும், அங்குள்ள பார்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கோரியிருந்தார்.
பதில் அளிக்க உத்தரவு
இந்த மனு மீதான விசாரணை நேற்று தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வில் நடந்தது. அப்போது நீதிபதிகள், ‘‘மனுதாரரின் கோரிக்கையை 4 மாதத்திற்குள் பரிசீலித்து தகுந்த முடிவெடுக்க வேண்டும்’’ என தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT