Published : 27 Aug 2016 01:45 PM
Last Updated : 27 Aug 2016 01:45 PM

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் இடங்கள் மேலும் 5 குறைப்பு: சீட் எண்ணிக்கை அதிகரிக்கப்படாததால் ஏமாற்றம்

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் 100 எம்பிபிஎஸ் இடங்கள் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஏற்கெனவே இருக்கிற இடங்களில் மேலும் 5 இடங்கள் குறைக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் ஆரம்ப காலத்தில் 183 எம்பிபிஎஸ் இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்தது. பேராசிரியர்கள் பற்றா க்குறை, வகுப்பறை, ஆய்வுக் கூடங்கள் உள்ளிட்ட அடிப்படை கட்டமை ப்பு வசதிகள் குறைவால், ஆண்டுதோறும் ஒரு சில இடங்கள் குறைக்கப்பட்டு வந்து, கடந்த ஆண்டு 155 எம்பிபிஎஸ் இடங் களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற்றது. இதனிடையே, கடந்த ஆண்டு, எம்பிபிஎஸ் இடங் களின் எண்ணி க்கையை 250 ஆக உயர்த்த, தமிழக அரசு மூலம் மதுரை மருத்துவக் கல்லூரி நிர்வாகம் இந்திய மருத்துவ கவுன்சிலிடம் விண்ணப்பித்தது. இந்திய மருத் துவ கவுன்சில் குழு ஆய் வுக்கு வந்தால் அவர்களின் ஒப்புதலை பெறும் விதமாக, தற்போது அரசு ராஜாஜி மருத்துவமனையின் கட்டமைப்புகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளை கல்லூரி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. ஆனால், தற்போது வரை இந்திய மருத்துவ கவுன்சில் குழு கல்லூரியில் ஆய்வுக்கு வரவில்லை.

சமீபத்தில் பிரதமர் மோடி, தமிழகத்துக்கு 387 எம்பிபிஎஸ் இடங்களை வழங்க ஒப்புதல் அளிப்பதாகவும், அதற்காக ஒரு இடத்துக்கு ரூ.1 கோடி நிதி ஒதுக்குவதாகவும் தெரிவித்து இருந்தார். இதில் மதுரை மருத்துவக் கல்லூரிக்கு கூடுதலாக 100 இடங்கள் ஒதுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், மருத்துவக் கல்லூரியில் இருக்கிற எம்பிபிஎஸ் இடங்களில் 5 இடங்களை அகில இந்திய மருத்துவ கவுன்சில் குறைத்தது. அதனால், இந்த ஆண்டு 150 இடங்களுக்கே சேர்க்கை நடைபெற்றது. கூடுதல் சீட்டுகள் கிடைக்கும் என எதிர்பார்த்து காத்திருந்த இருக்கிற இடங்களும் குறைக்கப்பட்டது மருத்துவக் கல்லூரி நிர்வாகத்துக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து மருத்துவக் கல்லூரி உயர் அதிகாரி ஒரு வரிடம் கேட்டபோது, மதுரை அரசு மருத்துவக் கல்லூரிக்கு கூடுதலாக 100 இடங்களும், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரிக்கு 100 இடங்களும், கோவை மருத்துவக்கல்லூரிக்கு 100 இடங்களும், மீதி 87 இடங்கள் மற்ற கல்லூரிகளுக்கு ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த கல்வி ஆண்டில் 250 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை உறுதியாக நடக்கும் என்றார்.

இடங்கள் குறைக்கப்பட்டதற்கு காரணம் என்ன?

பேராசிரியர்கள் சிலர் கூறியதாவது: மருத்துவக் கல்லூரியில் சில குறைபாடுகள் இருப்பதாக முன்பு ஆய்வுக்கு வந்திருந்த இந்திய மருத்துவ கவுன்சில் சுட்டிக்காட்டியது. ஆனால், தற்போது வரை அந்த குறைபாடுகளை நீக்காமல் கூடுதல் இடங்களை பெறுவதிலேயே கல்லூரி நிர்வாகம் முனைப்பாக இருக்கிறது. ஆனால், தற்போது 5 சீட்டுகள் குறைக்கப்பட்டது, குறைபாடுகளுக்காக அல்ல. தற்போது இந்தியா முழுவதுமே மருத்துவக் கல்லூரிகளில் 50, 75, 100, 150, 250 எம்பிபிஎஸ் இடங்கள் என்ற அளவிலேயே மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்ற அடிப்படையில், மதுரை மருத்துவக் கல்லூரியில் 5 இடங்கள் குறைக்கப்பட்டுள்ளன என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x