Last Updated : 23 Mar, 2017 09:57 AM

 

Published : 23 Mar 2017 09:57 AM
Last Updated : 23 Mar 2017 09:57 AM

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 தலைமுறை சொந்தங்கள் சந்தித்து உறவாடிய விழா: தூத்துக்குடி அருகே மீண்டும் துளிர்த்த பந்தம்

தூத்துக்குடி அருகே ஒரு குடும்பத்தின் 7 தலைமுறையைச் சேர்ந்தவர்கள், சொந்த மண்ணில் ஒன்றாகக் கூடி, தங்கள் பந்தத்தைத் துளிர்விடச் செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், சாயர் புரம் அருகில் உள்ள புளியங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற நல்லாசிரியர் எஸ்.ஞான ராஜ். இவர் தனது குடும்பத்தின் 7 தலைமுறையினரை ஓர் இடத்தில் சந்திக்க வைக்கும் விழாவுக்கு ஏற்பாடு செய்தார். சாத்தான்குளத்தில் இருந்து 7 தலை முறைகளுக்கு முன் இடம்பெயர்ந்து புளியங்காடு வந்த இலங்காமணி என்பவரது தலைமுறையில் தொடங்கி, சாந்தப்பன், தேவ சகாயம், முத்தாபரணம் என்று நீண்டு, இப்போது ஏழாவது தலை முறையாக பல்கிப் பெருகியுள்ள தனது குடும்பத்தினரைக் கடந்த 2010-ல் முதன்முதலாக ஞானராஜ் ஒருங்கிணைத்தார்.

7 ஆண்டுகளுக்கு பிறகு

மீண்டும் தனது 7 தலைமுறை சொந்தங்களை ஒருங்கிணைத்து குடும்ப விழாவை கடந்த 19-ம் தேதி நடத்தினார். தமிழகம் மட்டுமல்லாது அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, நெதர்லாந்து, மலேசியா, துபாய், ஓமன் என பல்வேறு நாடுகளில் வசிக்கும் தங்களின் உறவுகளை நீண்ட தேடுதலுக்குப் பிறகு ஒருவர் பின் ஒருவராக கண்டுபிடித்து அழைப்பு அனுப்பினார்.

புளியங்காட்டில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு அதிகாலை முதலே சொந்தங்கள் வரத் தொடங்கினர். குழந்தைகள் முதல் முதியவர் வரை 300 பேர் ஒன்று கூடினர். ஒருவரையொருவர் அடையாளம் கண்டு, உறவுகளைப் பகிர்ந்து அளவளாவினர்.

92 வயது மூதாட்டி

காலை முதல் மாலை வரை விருந்து, ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்தால் மண்டபம் களைகட்டியது. மலேசியாவில் இருந்து வந்திருந்த, மூன்று தலைமுறைக்கு முந்தையவரான நேசமணி(92) என்ற மூதாட்டிதான் இக்குடும்பத்தில் மூத்தவர். இவ்விழாவின்போது ‘சிந்தனை விருந்து’ என்ற புத்தகம், அரங்கில் வெளியிடப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது. வேர் முதல் கிளை வரை குடும்பத்தை அடையாளம் காட்டும் விதமாக ‘ஒலிவ மரக் கன்றுகள்’ என்ற நூலும் வெளியிடப் பட்டது.

நல்லாசிரியர் எஸ்.ஞானராஜ் கூறும்போது, ‘‘மண்ணையும், மரபையும் மறந்தவர்கள் மனிதர் களாக இருக்க முடியாது. எங்கள் முன்னோர் சாத்தான்குளத்தில் இருந்து புளியங்காட்டில் குடி யேறினர். அந்தக் காலத்தில் மணமக்களை ஏற்றிச் செல்லும் பல்லக்கு வண்டிகளை ஓட்டிய அவர்கள், நாளடைவில் விவசாயத் திலும் வேரூன்றினர். எங்களது இரண்டாம் தலைமுறையினர் கிறிஸ்தவ மதத்துக்கு மாறி விட்டனர். பக்தியில் மட்டுமின்றி, கல்வியிலும் சிறந்து விளங்கியதால் பட்டப்படிப்பு முதல் பொறியியல், மருத்துவப் படிப்பு வரை தலைமுறைக்கு 50 முதல் 60 பேர் கற்றுத் தேர்ந்தனர்.

இக்கூடுகையின் மூலம் பழமையை அறிய முடிந்ததோடு, தொலைந்து கொண்டிருக்கும் கூட்டுக் குடும்பத்தின் அருமையை யும் பூரணமாக அனுபவிக்க முடிந் தது. இனி வாய்ப்பு இருந் தால் ஆண்டுக்கு ஒருமுறை கூடுவதற் குத் திட்டமிட்டுள்ளோம்’’ என்றார்.

எஸ்.ஞானராஜ்

மூதாட்டி ஆனந்தம்

மலேசியாவில் ஆசிரியையாக பணியாற்றிய 3 தலைமுறையை கண்ட மூதாட்டி நேசமணி(92) கூறும்போது, ‘‘இந்நிகழ்வில் பங் கேற்றது மிகுந்த மகிழ்ச்சியை அளிக் கிறது. சொந்தங்களைப் பார்க்கும் போது மனம் ஆனந்தத்தில் திளைக் கிறது. கடவுள் அருளால் அடுத்த முறையும் வருவேன்’’ என்றார்.

வேர்களைத் தேடி...

நேசமணியின் பேரன் மருத்துவர் ஜேசுயா நவராஜ் கூறும்போது, ‘‘சொந்த மண், சொந்தங்கள், சுற்றங்கள் என வாழும் வாழ்க் கைக்காக எங்களைப்போல் வெளி நாடுகளில் வாழ்பவர்கள் ஏங்கும் ஏக்கம் பிறருக்கு தெரியாது. பல தலைமுறையினரை ஓர் இடத்தில் பார்த்ததும், இங்கேயே இருந்து விடலாமா என்ற ஆசை வருகிறது. வெளிநாட்டில் வேலை, பணம், வசதியான வாழ்க்கை என்று வாழ்ந்தாலும், சொந்த ஊரில் சுற்றங் கள் சூழ வாழ்வது போல் வராது. ஒவ்வொருவரும் தங்கள் பரம்பரை யின் வேரைக் கண்டுபிடித்து, ஒன்று சேர்ந்து ஆனந்தமாக இருக்க வேண்டும். வாழ்க்கையில் இதைவிட சந்தோஷம் வேறெதுவும் இல்லை’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x