எய்ட்ஸ் பாதிப்புக்கு ஆளானவருக்கும் ஆயுள் காப்பீடு கிடைக்க நடவடிக்கை

எய்ட்ஸ் பாதிப்புக்கு ஆளானவருக்கும் ஆயுள் காப்பீடு கிடைக்க நடவடிக்கை
Updated on
1 min read

எய்ட்ஸ் உள்ளோருக்கு கல்வி, மருத்துவம், இருப்பிடம், வேலை வாய்ப்பு போன்ற வசதிகள் எப்போதும் சமூகத்தில் மறுக்கப்பட்டே வந்திருக்கின்றன. வாழ்க்கைப் பாதுகாப்புக்கான ஆயுள் காப்பீட்டில் சேர்ப்பதற்கான தகுதி வரையறையில் இருந்தும் இவர்கள் விலக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டுக் கழகம் (ஐ.ஆர்.டி.ஏ) அக்டோபர் 11ம் தேதியிட்ட சுற்றறிக்கை ஒன்றை அனைத்து காப்பீடு நிறுவனங்களுக்கும் அனுப்பியுள்ளது. அதில் எய்ட்ஸ் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கும் ஆயுள் காப்பீடு, மருத்துவக் காப்பீடு வழங்குவது குறித்தும் அதற்கு ஏற்றவாறு காப்பீட்டுத் திட்டங்களை வடிவமைத்து 2014 ஏப்ரல் 1ம் தேதிக்குள் சமர்ப்பிக்கும்படி அறிவுறுத்தியுள்ளது. எய்ட்ஸ் உள்ளோருக்குக் காப்பீடு வழங்க காப்பீட்டு நிறுவனங்கள் தயங்குவதற்குக் காரணம் இதன் மூலம் லாபம் வருமா என்ற சந்தேகம்தான். ஆயினும் மேலை நாடுகள் பலவற்றில் இதற்கென தனியாக காப்பீட்டுத் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. குழுவாகவோ தனியாகவோ அந்தக் காப்பீட்டுத் திட்டங்களில் தங்களை இணைத்துக் கொள்ள முடியும். "காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டுக் கழகம் சமீபத்தில் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் நிறைய குழப்பங்கள் உள்ளன. எய்ட்ஸ் நோயாளிகளுக்கான புதிய திட்டங்களைத் தீட்டுவதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளன. இதுபற்றி கழகத்துக்கும் தெரிவித்துள்ளோம். கூடிய விரைவில் அவை தெளிவுபடுத்தப்படும்" என்று கூறுகிறார் தனியார் காப்பீட்டு நிறுவனத்தைச் சார்ந்த ரவி.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in