Last Updated : 19 Jul, 2016 03:14 PM

 

Published : 19 Jul 2016 03:14 PM
Last Updated : 19 Jul 2016 03:14 PM

அதிமுக பிரமுகரிடம் அடிபணிந்த காவல்துறை: அடிபட்ட காவல் ஆய்வாளரை கண்டுகொள்ளாத அதிகாரிகள் - குமுறும் வேலூர் மாவட்ட போலீஸார்

சத்துவாச்சாரி காவல் ஆய்வாளரைத் தாக்கியதாகக் கூறப்படும் அதிமுக பிரமுகர் ஜி.ஜி.ரவிக்கு ஆதரவாக உயரதிகாரிகள் செயல்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வேலூர் அருகே மணல் கடத்தல் வாகனத்தை பறிமுதல் செய்யச் சென்ற சத்துவாச்சாரி காவல் ஆய்வாளர் பாண்டியை, அதிமுக பிரமுகர் ஜி.ஜி.ரவி ஜூலை 17-ம் தேதி நள்ளிரவு தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து விரைந்து சென்ற துணை காவல் கண்காணிப்பாளர் பன்னீர்செல்வம், ஜிஜி.ரவியிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஆய்வாளர் பாண்டி மற்றும் தலைமைக் காவலரை பத்திரமாக அழைத்து வந்ததாகக் கூறப்படுகிறது.

அதன்பிறகு வேறு ஒரு காவல் நிலையத்தில் ஜிஜி.ரவிக்கு ராஜ உபச்சாரம் செய்ததாகக் கூறப்படுகிறது. நடவடிக்கை எடுக்காமல் காவல் நிலையத்தில் வைத்து உபசரிப்பதா? என அடிபட்ட ஆய்வாளர் பாண்டி கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆனால் அவரது பேச்சை யாரும் பொருட்படுத்தாததால் முதல்வரின் தனிப்பிரிவில் பாண்டி புகார் செய்துள்ளார். அதன்பிறகுதான் ஜிஜி.ரவியை யும் அவரது ஆட்களையும் போலீஸார் கைது செய்துள் ளனர்.

இது குறித்து காவல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

காவல் துறையில் உயர் பொறுப்பில் உள்ள அதிகாரிகள் தங்கள் கீழ் பணியாற்றும் அதிகாரிகளுக்கு முழு சுதந்திரம் கொடுப்பது இல்லை. காவல் நிலையத்துக்கு வரும் புகார் மீது வழக்குபதிவு செய்ய வேண்டுமென்றாலும், உயர் அதிகாரிகளின் அனுமதி பெற்ற பிறகே வழக்குபதிவு செய்யும் நிலை வேலூர் மாவட்டத்தில் உள்ளது.

மணல் கடத்தல், சாராயம், கந்து வட்டி, கட்டப் பஞ்சாயத்து, ரவுடிசம் போன்ற சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுபவர்களிடம் காவல் துறை உயர் அதிகாரிகள் நெருங்கிய தொடர்பு வைத்துள்ள னர். இதனால், குற்றச்செயல்களில் ஈடுபடுவர்களை நேர்மையான அதிகாரிகளால் நெருங்கக்கூட முடியவில்லை. பிறகு எப்படி சட்டம் - ஒழுங்கு கட்டுக்குள் இருக்கும்.

அதேபோல், அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள், ஆளும் கட்சியினர், ஆட்சியில் அதிகாரம் மிக்கவர்கள் உயர் அதிகாரிகளிடம் நெருக்கமான நட்புறவை வளர்த்து வருவதால், கீழ் மட்டத்தில் வேலை செய்யும் எங்களால் ஒன்றுமே செய்ய முடியவில்லை.

வேலூர் சத்துவாச்சாரி காவல் ஆய்வாளர் பாண்டி தாக்கப்பட்ட சம்பவத்தை நினைத்துப் பார்க்கும்போது ‘ஏன்டா போலீஸ் வேலைக்கு வந்தோம்’ என்று எண்ணத் தோன்றுகிறது.

மணல் கடத்தல் வாகனத்தை பறிமுதல் செய்யச் சென்ற ஆய்வாளர் பாண்டி தாக்கப்பட்டு தனியார் பொறியியல் கல்லூரியில் சிறை வைக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் கிடைத்து, நீண்ட நேரம் கழித்தே வேலூர் காவல் துணை கண்காணிப்பாளர் பன்னீர்செல்வம், தனது போலீஸ் படையுடன் சென்றுள்ளார். ரவுடிகளால் தாக்கப்பட்டது காவல் ஆய்வாளர் என்று தெரிந்தும் உடனடியாக நடவடிக்கை எடுக்காமல், ‘பேசித் தீர்த்துக்கொள்ளலாம்’ என ஆய்வா ளர் பாண்டியிடம் சமரசம் பேசியது நியாயமா?. ஜி.ஜி.ரவியை வழக்கில் இருந்து தப்பிக்க வைக்க ஆளும் கட்சியினர் பெரும் முயற்சி மேற்கொண்டனர். ஜி.ஜி.ரவிக்கு விசுவாசமாக கடைசி வரை உயர்அதிகாரி ஒருவர் நடந்து கொண்டார்.

தான் கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் வேலையை உடனடியாக ராஜினாமா செய்வேன் என சத்துவாச்சாரி காவல் ஆய்வாளர் பாண்டி தன் மேலதிகாரிகளிடம் திட்டவட்டமாகக் கூறினார்.

இப்பிரச்சினை சமூக வலை தளம் மூலம் வேகமாகப் பரவியது. இறுதியாக முதல்வர் அலுவலகத்திலிருந்து உத்தரவு வந்தபிறகு, 18 மணி நேரம் கழித்து ஜி.ஜி.ரவி மீது கொலை முயற்சி வழக்கு உட்பட 8 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x