Published : 04 Mar 2014 12:00 AM
Last Updated : 04 Mar 2014 12:00 AM
சென்னையின் 3 நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் திங்கள்கிழமை மாலை தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினர்.
சென்னையில் தென் சென்னை, மத்திய சென்னை, வட சென்னை ஆகிய 3 நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன. இத் தொகுதிகளில் அதிமுக சார்பில் முறையே டாக்டர் ஜெ.ஜெயவர்த்தன், எஸ்.ஆர்.விஜயகுமார், டி.ஜி.வெங்கடேஷ் பாபு ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை முதல்வரும் கட்சியின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா காஞ்சிபுரத்தில் திங்கள்கிழமை மாலை தொடங்கினார். இதையடுத்து, சென்னையின் 3 நாடாளுமன்ற தொகுதிகளின் அதிமுக வேட்பாளர்களும் திங்கள்கிழமை மாலையே பிரச்சாரத்தை தொடங்கினர். தென் சென்னை வேட்பாளர் டாக்டர் ஜெ.ஜெயவர்த்தன் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தி சாமி தரிசனம் செய்து, அங்கிருந்து பிரச்சாரத்தை தொடங்கினார். பிறகு, கச்சேரி ரோடு ஜெயின் கோயில் மற்றும் பள்ளிவாசல், சாந்தோம் தேவாலயங்களில் பிரார்த்தனை செய்தார். தொடர்ந்து, திறந்த ஜீப்பில் சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.
மத்திய சென்னை வேட்பாளர் எஸ்.ஆர்.விஜயகுமார் புரசைவாக்கம் பாதாள பொன்னியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்து, பிரச்சாரத்தை தொடங்கினார். வட சென்னை வேட் பாளர் டி.ஜி.வெங்கடேஷ் பாபு திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்து, பிரச்சாரத்தை தொடங்கினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT