Published : 28 Jul 2016 09:48 AM
Last Updated : 28 Jul 2016 09:48 AM
கடந்த 10 ஆண்டுகளில் சென்னை துறைமுகம் வழியாக 20 லட்சம் கார்களை ஹுண்டாய் நிறுவனம் ஏற்றுமதி செய்துள்ளதாக சென்னைத் துறைமுக பொறுப்புக் கழகத் தலைவர் சிரில் சி.ஜார்ஜ் தெரிவித்தார்.
ஹூண்டாய் கார் தயாரிப்பு நிறுவனமும் சென்னைத் துறை முகமும் கார் ஏற்றுமதி வர்த்தகம் தொடங்கி 10 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதையொட்டி சென்னை துறைமுக பொறுப்புக் கழகத் தலைவர் சிரில் சி.ஜார்ஜ், ஹுண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஒய்.கே.ஹூ ஆகியோர் சென்னையில் நிருபர்களுக்கு நேற்று பேட்டியளித்தனர். அப்போது சிரில் சி.ஜார்ஜ் கூறியதாவது:-
சென்னை ஸ்ரீபெரும்புதூர் அருகே 1996-ம் ஆண்டு ஹுண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே சென்னைத் துறைமுகத்தை அந்நிறுவனம் பயன்படுத்தி வருகிறது. 2000-ம் ஆண்டுமுதல் கார்களை ஏற்றுமதி செய்து வருகிறது. 2006-ம் ஆண்டுவரை 3 லட்சம் கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. அதன் பின்னர்தான் கார் ஏற்றுமதிக்கான வர்த்தக ஒப்பந்தம் 2006-ம் ஆண்டு போடப்பட்டது. இந்த வர்த்தகம் தொடங்கி 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்த காலக்கட்டத்தில் ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் சென்னை துறைமுகம் வழியாக 20 லட்சம் கார்களை பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
உற்பத்திப் பிரிவில் விரிவாக்கம்
ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஒய்.கே.ஹு பேசும் போது, “சென்னைத் துறைமுகத் தில் இருந்து 92 நாடுகளுக்கு கார்களை ஏற்றுமதி செய்கிறோம். எங்கள் நிறுவனத்தின் கார் உற்பத்திப் பிரிவில் விரிவாக்கப் பணிகள் நடக்கின்றன. அப்பணி முடிந்து கூடுதலாக கார்கள் உற்பத்தி செய்யப்படும்போது, அந்த கார்களும் சென்னைத் துறைமுகம் வழியாகத்தான் ஏற்றுமதி செய்யப்படும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT