Published : 24 Dec 2013 12:00 AM
Last Updated : 24 Dec 2013 12:00 AM

அர்விந்த் கேஜ்ரிவால் பிறந்தது மதுரையில்?- போலி பிறப்புச் சான்றிதழ் கிளப்பிய பரபரப்பு

உயிருடன் இருக்கும் அமைச்ச ருக்கே இறப்புச் சான்றிதழ் கொடுத்து சர்ச்சையை ஏற்படுத்திய மதுரை மாநகராட்சி, தற்போது அர்விந்த் கேஜ்ரிவால் மதுரையில் பிறந்ததாக சான்றிதழ் வழங்கியுள்ளது.

மதுரை மாநகராட்சியில் பிறப்பு, இறப்புச் சான்றிதழ் வழங்குவதில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் வந்தன. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அமைச்சர் செல்லூர் கே.ராஜு, மதுரை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.அண்ணாதுரை ஆகியோரின் பெயரில் இறப்புச் சான்றிதழ் வாங்கி, ஒருவர் இதனை அம்பலப்படுத்தினார். இந்த சர்ச்சைக்குப் பிறகு, மாநக ராட்சி அலுவலகத்தில் பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்கும் பிரிவில் பல்வேறு மாற்றங்கள் செய்யப் பட்டன. வெளிநபர்கள் அங்கே நுழைவதும் தடை செய்யப்பட்டது.

இந்தச் சூழலில், ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அர்விந்த் கேஜ்ரி வாலுக்கு மதுரை மாநகராட்சியில் பிறப்புச் சான்றிதழ் பெற்றுள்ளனர் சிலர். இந்தச் சான்றிதழ் நகலுடன், மாநகராட்சியில் நடைபெறும் பல்வேறு முறைகேடுகள் குறித்த மனுவை மதுரை மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர்கள் எஸ்.முத்துக்குமார், பி.ஸ்டாலின், எஸ்.மோகன்தாஸ், வி.லிங்கநாததுரை ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை வழங்கினர். அந்தச் சான்றிதழில் தற்போது டெல்லி ராம்வர்மா நகரில் வசிக்கும் ராம்ஜி ராவ் கெய்க்வாட், கீதா தேவி தம்பதியரின் மகனான அர்விந்த் கேஜ்ரிவால் மதுரை கே.புதூர் கற்பக நகரில் 27-ம் நம்பர் வீட்டில் பிறந்ததாகக் குறிப்பிட்டு, மதுரை மாநகராட்சி அலுவலக முத்திரை உள்ளது. பின்னர் அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:

மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள வழக்கறிஞர்கள் அலுவலகக் கட்டடத்தில், அறை எண் 95-க்குள் ஜன்னல் வழியாக ஒரு கடிதம் வீசப்பட்டிருந்தது. அதை வியாழக்கிழமை வழக்கறிஞர் முத்துக்குமார் பார்த்தார். அந்த கடிதத்துடன் அர்விந்த் கேஜ்ரி வால் பிறப்புச் சான்றிதழுடன், மாநகராட்சியில் இன்னும் முறைகேடு கள் நடப்பதாகவும் குறிப்பிட்டு இப்படிக்கு சமூக ஆர்வலர் என்று எழுதப்பட்டிருந்தது. இதுபற்றி விசாரித்தபோது, அது மாநகராட்சி அலுவலகத்தில் வழங்கப்பட்டதுதான் என்று தெரியவந்தது. அதைத் தொடர்ந்தே ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளோம்.

போலி பிறப்புச் சான்றிதழ் பற்றி மதுரை மாநகராட்சி அதிகாரிகளிடம் விசாரித்தபோது, மாநகராட்சியில் இருந்து பூர்த்தி செய்யப்படாத பிறப்பு, இறப்புச் சான்றிதழ்களை மதுரை அரசு மருத்துவமனை பயன்பாட்டுக்காக வழங்குவது வழக்கம். அதன்படி, வரிசை எண் 28001 முதல் 33000 வரையுள்ள 5 ஆயிரம் சான்றிதழ்களை கடந்த 8 மாதங்களுக்கு முன்பு அரசு மருத்துவ மனை எழுத்தர் வீரணன் என்பவரிடம் வழங்கினோம். அர்விந்த் கேஜ்ரிவால் பிறப்புச் சான்றிதழில் உள்ள வரிசை எண் 28241 என்று இருப்பதால், இது அரசு மருத்துவமனையில் இருந்து தவறான ஆட்களின் கைக்குப் போயிருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம்.

இதில் உள்ள முத்திரை மண்டல அலுவலக முத்திரைதான். மாநகராட்சி முத்திரையில் கோபுரச் சின்னம் இருக்கும். இது அமைச்சரின் பெயரில் இறப்புச் சான்றிதழ் பெறப்பட்ட காலத்தில் வழங்கப்பட்ட சான்றிதழ் என்பதற்கு அதில் உள்ள தேதியே (20.5.2013) சாட்சி. இதுபற்றி முழு விசாரணை நடத்தப்படும் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x