Last Updated : 16 Sep, 2013 02:31 AM

 

Published : 16 Sep 2013 02:31 AM
Last Updated : 16 Sep 2013 02:31 AM

ஜெயலலிதாவுடன் சோ திடீர் சந்திப்பு

சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை, அரசியல் விமர்சகர் சோ ஞாயிற்றுக்கிழமை திடீரென சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு சுமார் அரை மணி நேரம் நீடித்தது.

பேரறிஞர் அண்ணாவின் 105-வது பிறந்தநாள் நிகழ்ச்சியில் ஜெயலலிதா பங்கேற்றுவிட்டுத் திரும்பிய சிறிது நேரத்தில் இந்த சந்திப்பு காலை 11.30 மணி அளவில் நடைபெற்றது.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழகத்தில் அரசியல் கூட்டணி அமைப்பதற்கான மறைமுக பேச்சுவார்த்தைகளை சில அரசியல் கட்சிகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டன. ஆனால், அதிமுக தனித்துப் போட்டியிடும் என்று ஜெயலலிதா ஏற்கெனவே திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர், தன்னுடன் சுமுகமான உறவைப் பேணி வரும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் தனது கட்சிக்கு ஆதரவு தரக்கோரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஜெயலலிதாவை அரசியல் விமர்சகரும், பத்திரிகையாளருமான சோ சந்தித்துப் பேசியிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. முதல்வரை சந்திப்போரின் விவரங்கள் பட்டியலில், சோவின் பெயர் ரகசியமாக வைக்கப்பட்டிருந்ததாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. அதனால், சந்திப்பு பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை.

எனினும், மோடி விவகாரம் பற்றி அவர்கள் பேசியிருக்கலாம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். அதே சமயத்தில் அதிமுக கூட்டணியில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட இடதுசாரி கட்சிகள், பாஜகவுடன் அதிமுக நெருங்குவதை விரும்பாது. இரு கட்சிகளில் ஒன்று மட்டுமே அதிமுக கூட்டணியில் இடம்பெற முடியும். அடுத்து வரும் நாள்களில் இந்த சந்திப்புக்கான விடை கிடைக்க வாய்ப்பு உள்ளது என்றும் அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x