Published : 02 Feb 2014 12:00 PM
Last Updated : 02 Feb 2014 12:00 PM

காளை மாடு பால் சுரந்தால் மோடி பிரதமராகலாம்- இந்திய கம்யூ. கிண்டல்

காளை மாடு பால் சுரப்பது உண்மையாகும்போது மோடி பிரதமராகலாம் என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினரும் முன்னாள் எம்.பி.யுமான திருப்பூர் கே.சுப்பராயன்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகர, ஒன்றியக் குழு சார்பில் மன்னார்குடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்களவைத் தேர்தல் தேர்தல் நிதியளிப்புக் கூட்டத்தில் சுப்பராயன் பேசியது:

“தேர்தல் ஆரவாரம் களைகட்டியுள்ள நிலையில் மக்கள் பிரச்சினைகள் மறைக்கப்பட்டு பின்னுக்குத் தள்ளப்படுகிறது. உண்மையை மறைத்து, யுக்தி நிறைந்த விளம்பரங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

கடந்த 8 ஆண்டு பட்ஜெட்டில் மத்திய அரசு ரூ.5.5 லட்சம் கோடியை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வரிச்சலுகையாக வழங்கியுள்ளது. ஆனால், விவசாயிகளுக்கு உர மானியம் ரத்து செய்யப்படுகிறது. கட்டுப்படியான விலை கொடுக்க மறுக்கிறது.

நரேந்திர மோடி எதை எதிர்க்க வேண்டுமோ அதைப்பற்றி வாய் திறக்க மறுக்கிறார்.

காங்கிரஸ், பாஜக இருவேறு முகம் என்றாலும், இரண்டும் ஒரே கொள்கை கொண்ட கட்சிகளே. 60 ஆண்டுகள் காங்கிரஸ் இந்தியாவை ஆண்டது போதும், எங்களுக்கு 60 மாதம் ஆள வாய்ப்பு தாருங்கள் என்கிறார் மோடி. 72 மாதம் வாஜ்பாய் தலைமையில் ஆட்சி நடந்தபோது செய்யாததை, புதிதாக என்ன செய்யப் போகிறார் மோடி. கார்ப்பரேட் முதலாளிகளின் கொள்ளையைத் தடுத்து நிறுத்துவேன் என்று ஏன் மோடி பேச மறுக்கிறார்? மோடி அம்பானியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்.

மோடியின் விளம்பரத்துக்காக மட்டும் ரூ.400 கோடி செலவிடப் பட்டுள்ளது. மனிதன் பிறப்பால் உயர்ந்தவன், தாழ்ந்தவன் இல்லை என்று விஞ்ஞானம் மெய்ப்பிக்கிறது. இந்த உண்மையை மறைத்து ஆர்.எஸ்.எஸ். கலவரத்தை தூண்டுகிறது. அதற்கு மதிமுக-வும் துணைபோகிறது.

இதற்கு தரகு வேலை பார்க்கும் காந்திய மக்கள் இயக்கம் ‘கோட்சே மக்கள் இயக்கம்’ என்று

பெயரை மாற்றி வைத்து கொள்ளலாம்” என்றார் சுப்பராயன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x