Published : 25 Apr 2017 08:02 AM
Last Updated : 25 Apr 2017 08:02 AM

அரசு மருத்துவர்கள் விடுப்பு போராட்டம்: தமிழகம் முழுவதும் புறநோயாளிகள் பாதிப்பு - அறுவை சிகிச்சைகள் நடக்கவில்லை

தமிழகம் முழுவதும் அரசு டாக் டர்கள் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தியதால் புறநோயாளிகள் பாதிக்கப்பட்டனர். திட்டமிட் டிருந்த அறுவை சிகிச்சைகள் நடக்கவில்லை.

அரசு மருத்துவர்கள் மருத்துவ பட்டமேற்படிப்பில் சேருவதற்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள், பயிற்சி டாக்டர்கள், மருத்துவப் பட்டமேற்படிப்பு மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 6-வது நாளான நேற்று தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் சுமார் 18 ஆயிரம் பேர் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் புறநோயாளிகள் பிரிவு, அறுவை சிகிச்சைகள் பாதிக்கப்பட்டன.

சென்னை அரசு பொது மருத் துவமனைக்கு தினமும் 10 ஆயிரத் துக்கும் மேற்பட்ட புறநோயாளிகள் வருவதால், நிலைமையை சமாளிக்க பேராசிரியர்கள் புற நோயாளிகள் பிரிவில் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதனால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்று மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு தெரிவித்தார்.

சென்னையில் 80 சதவீத அரசு டாக்டர்கள் விடுப்பு எடுத்தனர். இன்று அனைவரும் பணிக்குச் செல்வார்கள். புறநோயாளிகள் பிரிவு வழக்கம்போல செயல்படும். அறுவை சிகிச்சைகளும் நடக்கும். மருத்துவக் கல்வி இயக்குநர் (டிஎம்இ) அலுவலகம் முன்பு இன்று தர்ணா போராட்டம் நடத்தப்படுகிறது என்று தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் டாக்டர் பி.பாலகிருஷ்ணன் கூறினார்.

அரசு மருத்துவர்கள், அரசு பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்க மாநில அமைப்புச் செயலாளர் ஏ.ராமலிங்கம் கூறும்போது, ‘‘விடுப்பு எடுத்து போராடுவதில் உடன்பாடு இல்லாததால், காலை 2 மணி நேரம் மட்டும் புறநோயாளிகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினோம். அவசர சிகிச்சைகள் அளித்தோம். திட்டமிட்ட அறுவை சிகிச்சைகளை செய்யவில்லை’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x