இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்ததாக வழக்கு: டெல்லி போலீஸில் டிடிவி தினகரன் ஆஜர் - தனி அறையில் வைத்து விசாரணை; தேர்தல் ஆணைய அதிகாரிகளும் சிக்குகின்றனர்

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்ததாக வழக்கு: டெல்லி போலீஸில் டிடிவி தினகரன் ஆஜர் - தனி அறையில் வைத்து விசாரணை; தேர்தல் ஆணைய அதிகாரிகளும் சிக்குகின்றனர்
Updated on
2 min read

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் போலீஸாரின் விசாரணைக்காக டெல்லி காவல் நிலையத்தில் டிடிவி தினகரன் நேற்று நேரில் ஆஜரானார். அவரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர்.

இந்த வழக்கில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் சிலருக் கும் தொடர்பு இருப்பதாக கூறப்படு கிறது. அது குறித்தும் தினகரனிடம் போலீஸார் விசாரித்தனர்.

அதிமுக (அம்மா) கட்சி துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகவும் இதற்காக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவருடன் ரூ.50 கோடி பேரம் பேசியதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் டெல்லி போலீஸார் விசாரணை நடத்தினர்.

இதையடுத்து கடந்த 16-ம் தேதி நள்ளிரவில் டெல்லி ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த சுகேஷ் சந்திரசேகரை கைது செய்துள்ளனர். முன்பணமாக கொடுக்கப்பட்ட ரூ.10 கோடியில் ஒரு கோடியே 30 லட்சம் ரூபாயை சுகேஷிடம் இருந்து போலீஸார் பறிமுதல் செய்துள் ளனர். அவரது 2 சொகுசு கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன. சுகேஷ் கொடுத்த வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து டிடிவி தினகரன் மீது 3 பிரிவுகளில் டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தினகரனுக்கு சம்மன்

இந்த வழக்கில் தினகரனிடம் நேரில் விசாரணை நடத்த டெல்லி போலீஸார் முடிவு செய்தனர். இதற்காக டெல்லி குற்றப்பிரிவு உதவி ஆணையர் சஞ்ஜய் ஷெராவத், ஆய்வாளர் நரேந்திர ஷாகல் ஆகியோர் கடந்த 19-ம் தேதி இரவு சென்னை வந்தனர். இரவு 10.50 மணிக்கு அடையாரில் உள்ள தினகரன் வீட்டுக்கு சென்று சம்மன் கொடுத்தனர். அதில், டெல்லியில் நடைபெறும் விசாரணைக்கு 22-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு கூறப்பட்டிருந்தது.

‘வேறு சில வழக்குகள் இருப்பதால் டெல்லியில் ஆஜராக 3 நாட்கள் அவகாசம் அளிக்க வேண்டும்’ என தினகரன் கேட்டார். ஆனால், டெல்லி போலீஸார் அவகாசம் அளிக்க மறுத்து, கட்டாயம் 22-ம் தேதி ஆஜராக வேண்டும் என்று கூறிவிட்டனர். தினகரன் சனிக்கிழமை விசா ரணைக்கு ஆஜராகாவிட்டால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று டெல்லி குற்றப்பிரிவு உதவி ஆணையர் சஞ்ஜய் ஷெராவத் கூறினார். இதனால் தினகரன் ஆஜராக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து தினகரன் நேற்று காலை 9.30 மணிக்கு ஏர் இந்தியா விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் அவர் கூறும்போது, ‘‘ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்களின் விருப்பம் நிறைவேறிக் கொண்டிருக்கிறது. விரைவில் நல்ல செய்தி வரும். டெல்லியில் நடக்கும் விசாரணைக் காக புறப்பட்டுச் செல்கிறேன். விசாரணை முடிந்ததும் உங்களை வந்து சந்திக்கிறேன்’’ என்று தெரிவித்தார்.

டெல்லி விமான நிலையத்தில் கூடியிருந்த நிருபர்கள், தினகரனை சூழ்ந்துகொண்டு கேள்விகளை கேட்டனர். அதற்கு பதிலளித்த தினகரன், ‘‘சுகேஷ் சந்திரசேகர் யார் என்றே எனக்குத் தெரியாது. டெல்லி போலீஸார் என் மீது வழக்கு பதிவு செய்திருப்பதால் விசாரணைக்காக இங்கு வந்தி ருக்கிறேன்’’ என்றார்.

இதைத் தொடர்ந்து பிற்பகல் 3 மணியளவில் டெல்லி சாணக்யாபுரி குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் தினகரன் ஆஜரானார். அப்போது வழக்கறிஞர்களும், ஏராளமான பத்திரிகையாளர்களும் அங்கு கூடியிருந்தனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீஸார், தினகரனை மட்டும் உள்ளே அழைத்துச் சென்றனர். அவரை தனி அறையில் வைத்து தீவிரமாக விசாரிக்கத் தொடங்கினர்.

தேர்தல் அதிகாரிகள் தொடர்பு

இந்த வழக்கில் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட சுகேஷ் கொடுத்த வாக்குமூலத்தை அடிப் படையாக வைத்தே தினகரனிடம் விசாரணை நடத்தப்பட்டது. தேர்தல் அதிகாரியும், ஐஏஎஸ் அதிகாரியுமான பவன் ரெய்னாவுக்கு இதில் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் தினகரனிடம் விசாரணை நடத்தப் பட்டது. மேலும் சில தேர்தல் அதிகாரிகளுக்கும் இதில் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்தும் தினகரனிடம் விசாரணை நடத்தப்பட்டது.

கைது செய்யப்பட்டுள்ள சுகேஷை, டெல்லி போலீஸார் காவலில் எடுத்து விசாரித்து வருகின் றனர். அவரை கொச்சி, பெங்களூ ருக்கு அழைத்துச் சென்று லஞ்சம் கொடுக்கப்பட்ட இடம், இது குறித்து பேசப்பட்ட இடங்கள் உட்பட பல தகவல்களை போலீஸார் திரட்டியுள்ளனர். அந்த ஆதாரங் களை வைத்தும் தினகரனிடம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும், தினகரனின் நண்பர் மல்லிகார்ஜுனன், உதவியாளர் ஜனார்த்தனன் ஆகியோரிடமும் போலீஸார் விசாரணை நடத் தினர்.

கைது செய்ய திட்டம்

விசாரணை முடிந்ததும் தினகரனை கைது செய்ய போலீஸார் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் டெல்லி வழக்கறிஞர்களுடன் தினகரன் ஆலோசனை நடத்தி இருக்கிறார். தினகரன் சென்னையில் இருந்து டெல்லி சென்ற அதே விமானத்தில் மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை, தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோரும் சென்றனர்.

பலத்த பாதுகாப்பு

டெல்லி குற்றப்பிரிவு அலுவல கம் அமைந்துள்ள சாணக்யாபுரி பகுதியில் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அந்த பகுதியில் வசிக்கும் மக்கள்கூட அடையாள அட்டையை காட்டிய பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in