Published : 24 Jan 2014 02:50 PM
Last Updated : 24 Jan 2014 02:50 PM

ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடக்கம்

இலங்கை சிறையில் அடைக்கப்பட்ட மீனவர்களை விடுதலை செய்யக் கோரி, ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் இன்று காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கினார்கள்.

கடந்த செவ்வாய்கிழமை ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து ராமேஸ்வரம் மற்றும் மண்டபத்திலிருந்து 700க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3,000த்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் திங்கட்கிழமை கடலுக்குச் சென்றனர்.

நள்ளிரவில் மீனவர்கள் கச்சத் தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டு இருந்தபோது இலங்கை கடற்படையினர் சிறிய ரக ரோந்து கப்பல்களில் ரோந்து வந்தனர்.

அப்போது ராமேஸ்வரத்தை சார்ந்த ஆரோக்கியராஜ் என்பவரது விசைப்படகு மீது மோதி படகை சேதப்படுத்தினர். மேலும் 10க்கும் மேற்பட்ட விசைப்படகின் வலைகளை அறுத்து கடலில் எறிந்ததாக மீனவர்கள் தெரிவித்தனர்.

பின்னர் இலங்கை கடல் எல்லைக்குள் வந்து மீன்பிடித்ததாக கூறி 25 மீனவர்களையும் சிறைப்பிடித்து அவர்களின் 6 விசைப்படகை கைப்பற்றி சென்றனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை இலங்கை காவல்துறையினரிடம் கடற்படையினர் ஒப்படைத்தனர்.

இலங்கை காவல் துறையினரின் விசாரணைக்கு பின்னர் மீனவர விடுவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் புதன்கிழமை ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பிப்ரவரி 3 வரை நீதிமன்ற யாழ்பாணம் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.

இதனை தொடர்ந்து ராமேஸ்வரத்தில் வெள்ளிக்கிழமை காலை மீனவர் பிரதிநிதிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இலங்கை சிறைகளில் வாடும் தமிழக மீனவர்களையும் அவர்களின் விசைப்படகுகளையும் மீனவர்கள் பேச்சுவார்த்தைக்கு முன்னரே விடுதலை செய்ய வலியுறுத்தி இன்று காலைவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்த்தில் ஈடுபடுவதாக அறிவித்தனர்.

முன்னதாக இந்த மீனவர் பிரதிநிதிகள் கூட்டத்தில் கச்சத் தீவுப் பகுதியில் தமிழக மீனவர்களுக்கு மீன் பிடிக்கும் உரிமை இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்திடம் மத்திய அரசு கூறியுள்ளதற்கு இக்கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் கரையோரங்களில் விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x