Published : 26 Jan 2014 09:47 AM
Last Updated : 26 Jan 2014 09:47 AM

தமிழக, இலங்கை மீனவர்கள் சென்னையில் நாளை பேச்சுவார்த்தை: இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் முன்னிலையில் நடக்கிறது

இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் முன்னிலையில் தமிழக - இலங்கை மீனவர்களிடையே சென்னையில் நாளை (திங்கள்கிழமை) பேச்சுவார்த்தை நடக்கிறது. இதுதொடர்பாக தமிழக அரசு சனிக்கிழமை இரவு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது, கைது செய்யப்படுவது உள்ளிட்ட பிரச்சினைக்கு தீர்வு காண இருநாட்டு மீனவர்களுக்கிடையே பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்று முதல்வரிடம் தமிழக மீனவப் பிரதிநிதிகள் வேண்டுகோள் விடுத்தனர்.

அதை ஏற்று, பேச்சுவார்த்தையை சென்னையில் நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமரை கடிதம் வாயிலாக முதல்வர் கேட்டுக்கொண்டார். பேச்சுவார்த்தைக்கு முன்பு, இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களும் அவர்களது படகுகளும் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

அதன்படி, இலங்கை சிறைகளில் இருந்த 295 தமிழக மீனவர்களும் காரைக்கால் 22 மீனவர்களும் விடுவிக்கப்பட்டனர். அவர்களின் 45 படகுகளும் விடுவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இரு நாட்டு மீனவர்களுக்கான பேச்சுவார்த்தை சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள மீன்வளத் துறை இயக்குநர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நாளை (திங்கள்கிழமை) காலை 10 மணிக்கு நடக்கிறது.

தமிழகம் சார்பாக

நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த கே.சிவஞானம், ஜி.வீரமுத்து, எஸ்.சித்திரவேலு, எம்.ஜெகநாதன், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த பி.ராஜமாணிக்கம், புதுக்கோட்டை மாவட்டம் என்.குட்டியாண்டி, ஜி.ராமகிருஷ்ணன், ராமநாதபுரம் மாவட்டம் ஜேசுராஜா, யு.அருளானந்தம், எம்.எஸ்.அருள், எஸ்.பி.ராயப்பன், என்.தேவதாஸ் ஆகியோரும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் சார்பாக எம்.இளங்கோவும் கலந்துகொள்வர்.

இலங்கை பிரதிநிதிகள்

அதேபோல இலங்கை மீனவர்களின் சார்பாக சதாசிவம், ஏ.ஜஸ்டின், அமல்தாஸ் ஜேசுதாசன் சூசை, என்.பொன்னம்பலம், செந்தில்நாதன், ஜே.எப்.அமிர்தநாதர், டபிள்யு.ஜே.காமிலஸ் பெரைரா, எஸ்.எஸ். அருள் ஜெனிபர், கே.டபிள்யு.எம். பெர்னாண்டோ அந்தோணி முத்து ஆகிய மீனவப் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.

தமிழக அரசின் பார்வையாளர்களாக மீன்வளத்துறை அமைச்சர் கே.ஏ.ஜெயபால், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை செயலர் எஸ்.விஜயகுமார், மீன்வளத்துறை இயக்குநர் எஸ்.முனியநாதன், கூடுதல் இயக்குநர் கே. ரெங்கராஜூ மற்றும் மீன்வளத்துறை அலுவலர்கள், கடலோர பாதுகாப்பு அமைப்புகளைச் சார்ந்த உயர் அலுவலர்களும் இலங்கை அரசு சார்பாக மீன்வளம் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் தலைமை இயக்குநர் நிமல் ஹெட்டியராச்சி, மீன்வளம் மற்றும் கடல்வாழ் உயிரின மேம்பாட்டு அமைச்சக ஆலோசகர் எஸ்.சுபசிங்கே, அட்டர்னி ஜெனரல் அலுவலக ஸ்டேட் கவுன்சிலர் நிவான் பெரீஸ், மீன் வளம் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் மேம்பாட்டுத் துறை உதவி இயக்குநர்கள் டபிள்யு.எஸ்.எல்.டிசில்வா மற்றும் பி.எஸ்.மிராண்டா, இந்திய அரசு சார்பாக மத்திய வெளியுறவுத் துறை இணைச் செயலர் சுசித்ரா துரை, துணைச் செயலர் மயங்க் ஜோஷி, இலங்கைக்கான இந்திய தூதரக உயர் அதிகாரி ஷிவ்தர்ஷன் சிங் ஆகியோர் கலந்துகொள்வார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x