Published : 05 Oct 2014 12:23 PM
Last Updated : 05 Oct 2014 12:23 PM

கருப்பை மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு குழந்தை: ஸ்வீடன் மருத்துவர்கள் சாதனை

உலகிலேயே முதன்முறையாக கருப்பை மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட பெண்ணுக்குக் குழந்தை பிறந்துள்ளது. இந்தச் சாதனையை ஸ்வீடன் நாட்டு மருத்துவர்கள் நிகழ்த்தியிருக்கிறார்கள். ஸ்வீடன் நாட்டுப் பெண் (36) ஒருவர், மரபணுக் கோளாறால் பிறக்கும்போதே கருப்பை இல்லாமல் பிறந்தார். எனினும், அவரிடம் கருமுட்டைகள் இருந்தன.

அந்தப் பெண்ணின் குடும்ப நண்பர் தனது கருப்பையை அவருக்குத் தானம் செய்ய முன்வந்தார். 61 வயதான அந்தப் பெண்ணுக்கு கடந்த ஏழு ஆண்டுகளாக மாதவிடாய் நின்றுவிட்டது குறிப்பிடத்தக்கது. கருப்பை மாற்று அறுவை சிகிச்சை முடிந்தவுடன், அவருடைய கருமுட்டைகளை ஆய்வுக்கூடச் சோதனை முறை மூலம் கருவூட்டப்பட்டது. கருப்பை மாற்று அறுவை சிகிச்சை முடிந்த ஓர் ஆண்டுக்குப் பிறகு, வளர்ந்த கருவை அவரது கருப்பையில் வைத்தனர். அதன் பிறகு மூன்று வாரம் கழித்து மேற்கொள்ளப்பட்ட பரிசோத னையில், அந்தப் பெண் கர்ப்பம் தரித்திருப்பது உறுதியானது.

இதைத் தொடர்ந்து கடந்த மாதம் அவருக்கு சிசேரியன் மூலம் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையின் எடை 1.775 கிலோ இருந்தது. தற்போது அந்தக் குழந்தையும் தாயும் நலமாக உள்ளார்கள். இதுகுறித்து ஸ்விடனில் உள்ள கோதன்பெர்க் பல்கலைக் கழகத்தின் பேராசிரியரும், இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டவருமான மேட்ஸ் ப்ரயென்ஸ்ட்ராம் கூறும்போது,

"சுமார் 10 ஆண்டுகள் விலங்குகளில் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் உலகம் முழுக்க உள்ள கருத்தரிக்க வாய்ப்பில்லாத பெண்கள் பலருக்குத் தீர்வு கிடைத்துள்ளது" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x