Published : 20 Mar 2014 12:00 AM
Last Updated : 20 Mar 2014 12:00 AM

பட்டப்படிப்புக்கு பின் +2 படித்தவர்கள் ஆசிரியர் பணிக்கு தகுதியானவர்களா?: உயர் நீதிமன்ற வழக்கில் தீர்ப்பு

பட்டப் படிப்பு மற்றும் பி.எட். படிப்பை முடித்து விட்டு +2 படிப்பில் தேறியவருக்கு பணி நியமனம் வழங்க மறுத்த ஆசிரியர் தேர்வு வாரியத்தின் நடவடிக்கை சரியல்ல என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

முதுநிலை தமிழ் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தகுதி பெற்றிருந்த வி.கனிமொழி என்பவர், கடந்த 21.7.2013 அன்று நடைபெற்ற எழுத்துத் தேர்வில் பங்கேற்றார். பின்னர் சான்றிதழ் சரிபார்ப்பு பணிக்கும் அழைக்கப்பட்டார். எனினும் பணி நியமனத்துக்காக தேர்வு செய்யப்பட்ட இறுதிப் பட்டியலில் அவர் பெயர் இல்லை.

கடந்த 18.8.2009 அன்று வெளியான அரசாணையின்படி, ஒருவர் 10-ம் வகுப்பு, +2, அதன் பின்னர் பட்டப் படிப்பு, பி.எட்., முதுநிலைப் பட்டம் என படித்திருக்க வேண்டும். இந்த வரிசைப்படி கனிமொழி படிக்கவில்லை என்பதால் அவருக்கு பணி நியமனம் வழங்க இயலாது என்று ஆசிரியர் தேர்வு வாரியம் கூறியது. அதாவது, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற கனிமொழி பின்னர் +2 படித்தார். ஆனால் அதில் அவர் தேர்ச்சி பெறவில்லை. அதன் பிறகு திறந்தவெளி பல்கலைக்கழகம் மூலம் பி.ஏ. தமிழ் பயின்று பட்டம் பெற்ற அவர், பின்னர் ரெகுலர் முறையில் பி.எட். மற்றும் எம்.ஏ. பட்டங்களை பெற்றார்.

இந்நிலையில் +2 தேர்ச்சி பெறாவிட்டால் பணி நியமனம் பெற முடியாது என்பதை அறிந்த அவர், அதன் பின்னர் +2 பயின்று தேர்ச்சி பெற்றார்.

எனினும் 10, +2, இளநிலைப் பட்டம், பி.எட். என்ற வரிசை முறைப்படி கனிமொழி படிக்காததால் அவருக்கு பணி நியமனம் பெறும் உரிமை இல்லை என்று கூறி அவருக்கு பணி நியமனம் வழங்க ஆசிரியர் தேர்வு வாரியம் மறுத்து விட்டது. இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் கனிமொழி மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி எஸ்.நாகமுத்து, மனுதாரர் கனிமொழிக்கு பணி நியமனம் வழங்க மறுத்த ஆசிரியர் தேர்வு வாரியத்தின் நடவடிக்கை சரியல்ல என்று தீர்ப்பளித்துள்ளார்.

“பி.ஏ. பட்டம் பெற்ற பிறகு ஒருவர் +2 தேர்ச்சி பெற்றாலும் கூட தமிழக அரசின் அரசாணைப்படி அது ஏற்புடையதே ஆகும். அதாவது முன்னர் படிக்க வேண்டியதை பின்னர் படித்து தேர்ச்சி பெற்றிருந்தாலும், அது பிரச்சினை ஆகாது.

ஆசிரியர் தேர்வு வாரியம் இது தொடர்பாக பரிசீலித்து, 4 வார காலத்துக்குள் இறுதியான உத்தரவை பிறப்பிக்க வேண்டும்” என்று நீதிபதி நாகமுத்து தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x