

சசிகலாவை ஆட்சி அமைக்க அழைப்பதில் ஆளுநர் காலதா மதம் செய்வதற்கு பாஜக, திமுகவே காரணம் என முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்காததால் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக அதிமுக நிர்வாகிகளுடன் சசிகலா நேற்றும் ஆலோசனை நடத்தினார். போயஸ் தோட்ட இல்லத்தில் நடந்த ஆலோசனையில் கட்சியின் அவைத் தலைவர் கே.ஏ.செங் கோட்டையன், எம்.பி.க்கள் வைத் திலிங்கம், விஜிலா சத்தியானந்த், எஸ்.ஆர்.விஜயகுமார், முன்னாள் அமைச்சர்கள் வைகைச்செல்வன், எஸ்.கோகுலஇந்திரா, ஜி.செந் தமிழன், மாதவரம் மூர்த்தி, முக்கூர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதுகுறித்து நிருபர்களிடம் வைகைச்செல்வன் கூறியதாவது:
கடந்த 9-ம் தேதி ஆளுநரை சந்தித்து, பெரும்பான்மை எம்எல் ஏக்களின் ஆதரவு இருப்பதால் தன்னை ஆட்சி அமைக்க அழைக்கு மாறு சசிகலா உரிமை கோரினார். ஆனால், 5 நாட்களாகியும் ஆளுநரி டம் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை. சசிகலாவைத் தவிர வேறு யாரும் எம்எல்ஏக்களின் கையெழுத்துடன் பட்டியலை அளிக்காத நிலையில் அவர் இவ்வாறு தாமதம் செய்வது ஏன் என்பது புரியவில்லை.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுக எம்எல்ஏக்கள் ஜனநாயக முறைப்படி தங்களது தலைவரை தேர்வு செய்துள்ளனர். ஆளுநரின் தாமதத்துக்கு பாஜக, திமுகவே காரணம். தமிழகத்தில் ஒரு வலுவான ஆட்சி அமைந்து விடக்கூடாது என்பதற்காக இந்த இரு கட்சிகளும் பின்னணியில் இருந்து செயல்படுகின்றன.
அரசியல் சட்டப்படி பெரும் பான்மை பலம் உள்ள கட்சியின் தலைவரை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும். இந்த ஜன நாயக கடமையை ஆளுநர் நிறை வேற்ற வேண்டும். இன்று (பிப். 13) மாலைக்குள் ஆளுநர் அழைப்பு விடுக்காவிட்டால் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்வோம்.
ஓபிஎஸ் பக்கம் சென்ற எம்.பி.க் களும், எம்எல்ஏக்களும் விரைவில் இங்கு திரும்பி வருவார்கள். சசிகலா பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. அதிமுக பொதுக்குழு உறுப்பினர் கள் அனைவரும் சசிகலாவையே ஆதரிக்கின்றனர். இவ்வாறு வைகைச்செல்வன் கூறினார்.
போயஸ் தோட்டத்தில் நேற்று சுமார் 2 ஆயிரம் பேர் திரண்டிருந்தனர். அவர்கள் அனைவருக்கும் அசைவ, சைவ உணவு, தண்ணீர் பாட்டில்கள், டீ, காபி, வடை போன்றவை வழங்கப்பட்டன. இதனால் அப்பகுதி பரபரப்பாகவே காணப்பட்டது.
பழிவாங்கவே வழக்கு பதிவு
அதிமுக தென்சென்னை வடக்கு மாவட்டச் செயலாளர் வி.பி.கலைராஜன் கூறியதாவது: போயஸ் தோட்ட இல்லத்தையும், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தையும் கைப்பற்றப்போவதாக முதல்வர் ஓபிஎஸ் பேசியிருந்தார். இவை இரண்டும் எனது மாவட்டத்துக்குள் வருவதால் யாராவது கைப்பற்ற நினைத்தால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என தற்காப்புக்காக பேசினேன். உணர்ச்சிவசப்பட்டு பேசியதை திரும்பப் பெறுவதாகவும் தெரிவித்தேன்.
ஆனாலும் என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. என்னை மிரட்டுவதற்காகவும், அரசியல் ரீதியாக பழிவாங்கவும் இவ்வாறு செய்துள்ளனர். எந்த மிரட்டலுக்கும் அஞ்ச மாட்டேன். சட்ட ரீதியாக வழக்குகளை சந்திப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.