உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட மதுரை அதிமுகவினர் ஆர்வம்: விருப்ப மனுவில் 20 கேள்விகள்

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட மதுரை அதிமுகவினர் ஆர்வம்: விருப்ப மனுவில் 20 கேள்விகள்
Updated on
2 min read

மதுரை மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட அதிமுகவினர் நேற்று விருப்பமனு வாங்க குவிந்தனர்.

மதுரை மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 3 நகராட்சிகள், 9 பேரூராட்சிகள், 13 ஊராட்சி ஒன்றியம், மற்றும் 420 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன. இதில் மாநகராட்சி 100 கவுன்சிலர்கள், 78 நகராட்சி கவுன்சிலர்கள், 144 பேரூராட்சி கவுன்சிலர்கள், 23 மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர்கள், 214 ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் கிராம ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான பிரதிநிதிகளை தேர்ந்தெடு ப்பதற்கான உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடக்கவுள்ளது. அதிமுக முதல் கட்சியாக தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சி நிர்வாகிகளிடம் இருந்து நேற்று முதல் விருப்பமனு பெறத் தொடங்கியது.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை பனகல் சாலை யில் உள்ள மாநகர கட்சி அலுவலகத்தில் மாநகராட்சி 76 வார்டுகளில் போட்டியிடுவதற்கு கட்சி நிர்வாகிகளுக்கு விருப்பமனு வழங்கப்பட்டது.

புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் பாண்டிகோவில் அருகே திருமண மண்டபத்தில் 24 மாநகராட்சி வார்டுகள், நகராட்சி கள், பேரூராட்சிகள், ஒன்றிய, மாவட்ட கவுன்சிலருக்கு விருப்ப மனு வழங்கப்பட்டது.

நேற்று காலை முதலே அதிமுகவினர் விருப்ப மனு வாங்க மாநகர், புறநகர் அலுவலகங்களில் குவிந்தனர்.

தற்போதைய கவுன்சிலர்கள், மாவட்ட, மாநகர நிர்வாகிகள், கிளைச் செயலாளர்கள், அணிச் செயலாளர்கள் ஆதரவா ளர்களுடன் வந்து, விருப்பமனு வாங்கி சென்றனர். பலர், அந்த மனுக்களை உடனே பூர்த்தி செய்து வழங்கினர்.

இந்த விருப்ப மனுக்களை, வரும் 22-ம் தேதிக்குள் வழங்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

அதிமுகவினர் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்ப மனுவில் 20 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.

போட்டியிட விரும்புபவர் அதே வார்டில் வசிப்பவரா, பெயர், ஜாதி, அதன் உட்பிரிவு விவரம், கட்சி அனுபவம், உறுப்பினராக சேர்ந்த ஆண்டு, கட்சியில் வகிக்கும் பதவி, உள்ளாட்சி அமைப்பில் வகிக்கும் பதவி, போட்டியிட மனு கொடுக்கும் வார்டில் இருக்கும் மொத்த வாக்காளர்கள், அவர்கள் எந்ததெந்த சமூகத்தை சேர்ந்தவர்கள், வெற்றி வாய்ப்பு எப்படி, கட்சிப் போராட்டங்களில் பங்கேற்ற அனுபவம், எத்தனைமுறை சிறை சென்றுள்ளீர், கட்சியில் இருந்து நீக்கப்பட்டு திரும்பச் சேர்த்துக் கொள்ளப்பட்டவரா, நீக்கப்பட்டால் அதற்கான காரணம் என்பது உள்ளிட்ட 20 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. இந்த கேள்விகளுக்கு அளித்த தகவல்கள் அனைத்தும் உண்மையாக கூறுகிறேன் என கையெழுத்து கேட்கப்படுள்ளது. இந்த கேள்விகளால் வேட்பாளர் பரிந்துரை பட்டியலில் இடம் பெறும் நபர்களுக்கு நேர்காணல் நடத்தி, கட்சித் தலைமை ஒப்புதலுடன் வேட்பாளர் பட்டியல் வர வாய்ப்புள்ளதால் கட்சி செல்வாக்கு, பண பலம், விசுவாசமிக்கவர்களுக்கு மட்டுமே சீட் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அதிமுகவினரால் வாகன நெரிசல்

அமைச்சர் செல்லூர் கே. ராஜுவின் மாநகரக் கட்சி அலுவலகம், அரசு மருத்துவமனை அருகே பனகல் சாலையில் உள்ளது. விருப்ப மனு வாங்க திரண்ட அதிமுகவினரின் வாகனங்களை சாலையின் குறுக்கு நெடுக்காக நிறுத்தி இருந்ததால் பனகல் சாலையில் நெரிசல் ஏற்பட்டது. அதனால், மருத்துவமனைக்கு வந்த நோயாளிகள், அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பனகல் சாலையை கடக்க முடியாமல் தவித்தனர். இந்த நிகழ்ச்சிக்கு கோரிப்பாளையம் முதல், கட்சி அலுவலகம் வரை பனகல் சாலையில் தோரணங்களும், கட்சிக் கொடி கட்டியும் பிரம்மாண்டமாக ஏற்பாடுகள் செய்திருந்தனர்.

நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க, அமைச்சர் இந்த நிகழ்ச்சியை தனியார் மண்டபத்தில் நடத்தி இருக்கலாம். ஆனால், நெரிசல் மிகுந்த மருத்துவமனை அருகே கட்சி அலுவலகத்தில் நடத்தி அவரே நெரிசல் ஏற்பட காரணமாகிவிட்டதால் மக்கள் அதிருப்தியுடனேயே அப்பகுதியை கடந்து சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in