Published : 07 Feb 2014 12:00 AM
Last Updated : 07 Feb 2014 12:00 AM

ஜெயலலிதாவின் பிரதமர் ஆசையை முறியடிக்க வேண்டும்: திமுக பொருளாளர் ஸ்டாலின் பேச்சு

ஜெயலலிதாவின் பிரதமர் ஆசையை திமுகவினர் முறியடிக்க வேண்டுமென்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

துறைமுகம் தொகுதி 27வது வட்ட திமுக செயலாளர் ஜி.எம்.தேவன் மகள் தீபிகா மற்றும் ஸ்ரீகாந்த் திருமணம் ராயபுரத்தில் நடைபெற்றது. இதில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மண மக்களை வாழ்த்தினார்.

பின்னர் அவர் பேசியதாவது:

நாற்பதும் நமதே என்ற முழக்கத்துடன் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பிரதமர் பதவிக்கு ஆசைப்படுகிறார். தமிழ்நாடு தற்போது இருண்ட மாநிலமாக உள்ளது. இந்தியா முழுவதையும் இருண்ட நாடாக மாற்ற அவர் பிரதமர் பதவிக்கு ஆசைப்படுகிறார்.

அவரது ஆசையை திமுக தொண்டர்கள் ஒற்றுமையாக செயல்பட்டு முறியடிக்க வேண்டும். திமுக தொண்டர்கள் செயல்திறன் மற்றும் ஆற்றல் மிக்கவர்கள். அவர்கள் இருக்கும் வரை, திமுகவை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது.

எனக்கு அரசியல் பணி, நாட்டு பணி, தேர்தல் பணி என பல பணிகள் இருக்கின்றன. அந்த பணிகளை ஒதுக்கி வைத்துவிட்டு இங்கு வந்துள்ளேன். தொண்டர்களின் இல்ல திருமணத்தை நடத்தி வைப்பதுதான் முக்கியமான பணி என்பதால் இங்கு வந்துள்ளேன்.

இந்த மணமக்கள் தாழ்த்தப் பட்ட வகுப்பைச் சேர்ந்த பட்டதாரிகள். ஒரு காலத்தில் உயர்ந்த வகுப்பினர்தான் பட்டப் படிப்பு படிக்க முடியும் என்ற நிலை இருந்தது.

அதை மாற்றிக் காட்டியவர் தலைவர் கருணாநிதி. நாடாளுமன்ற தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. கூட்டணி அமைப்பதற்கான நடவடிக்கைகளும் மும்முரமாக நடந்து வருகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x