Published : 01 Jan 2017 01:03 PM
Last Updated : 01 Jan 2017 01:03 PM

பணம் கிடைக்காமல் திண்டாட்டம்: கோவையில் சிரமத்துக்குள்ளான அஞ்சல் ஓய்வூதியர்கள்

கோவை, நீலகிரி, பொள்ளாச்சி, திருப்பூர் கோட்டங்களில் சுமார் 400-க்கும் மேற்பட்ட அஞ்சல் அலுவலகங்கள் உள்ளன. அஞ்சல் அலுவலகங்கள், ஆர்.எம்.எஸ்., எம்.எம்.எஸ். அலுவலகங்கள் ஆகியவற்றில் பணியாற்றி, ஓய்வுபெற்ற 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு அஞ்சல் அலுவலகங்கள் மூலம் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.

பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதில் சிரமம் ஏற்பட்டது. கடந்த மாதமே சிறிது சிறிதாகத்தான் ஓய்வூதியத்தை வழங்கியுள்ளனர். இந்நிலையில், நேற்று பெரும்பாலான அஞ்சலகங் களில் பணம் இல்லாததால், ஓய்வூதியம் வழங்கப்படவில்லை.

இதனால், ஏராளமானோர் கோவை கூட்ஸ் ஷெட் ரோடு பகுதி யில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகத்துக்கு வந்தனர். அங்கும் ரூ.4 ஆயிரம் மட்டுமே வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டதால், அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து அனைத்திந்திய அஞ்சல் மற்றும் ஆர்.எம்.எஸ். ஓய் வூதியர்கள் சங்க செயல் தலைவர் டி.சுப்பிரணியம் ‘தி இந்து’விடம் கூறியதாவது: கடந்த மாதமே சரிவர ஓய்வூதியத் தொகை கிடைக்காமல் சிரமத்துக்கு உள்ளானோம். இந்த மாதம் பெரும்பாலான அஞ்சல் அலுவலகங்களில் ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. தலைமை அஞ்சல் அலுவலகத்தில் மட்டும் ரூ.4 ஆயிரம் வழங்குகிறார்கள். ஓய்வூதியத்தை மட்டுமே நம்பி வாழும் முதியோருக்கு, அந்த தொகையும் கிடைக்காததால் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளோம். எனவே, ஓய்வூதியர்களுக்கு முழு ஓய்வூதியத் தொகையையும் வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

ஓய்வூதியர் சங்கத்தின் இணைச் செயலாளர் டி.எஸ்.வெங்கடாசலம் கூறும்போது, “ஒரு வாரத்துக்கு ரூ.24 ஆயிரம் எடுத்துக் கொள்ளலாம் என்று கூறினாலும், வங்கிகளில் பணம் இல்லாததால் அந்த தொகையையும் பெற முடியவில்லை. பெரும்பாலான ஏடிஎம்-கள் பூட்டப்பட்டுள்ளன. கறுப்புப் பணத்தையும், கள்ளப் பணத்தையும் ஒழிப்பதாகக் கூறு வதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை.

அதேசமயம், ஓய்வூதி யத்துக்காக முதியோர்களை பலமுறை அலைக்கழிப்பது எந்த வகையில் நியாயம்? குடும்பத்தை நடத்த முடியாமல் சிரமப்படும் ஓய்வூதியர்களின் பிரச்சினைகளைக் களைய இனியாவது மத்திய அரசு முன்வர வேண்டும்” என்றார்.

பேரூர் எம்.ஆர்.கார்டன் பகுதியைச் சேர்ந்த கே.வெங்கடாசலம் (82) கூறும்போது, “என்னால் நடக்கக்கூட முடியவில்லை. பேருந்தில் பயணம் செய்ய முடியாததால், டாக்சி பிடித்து வந்துள்ளேன். இப்போதும் ரூ.4 ஆயிரம்தான் கொடுத்திருக்கிறார்கள். எனக்கு மருந்து வாங்க இந்த தொகை போதாது. தள்ளாத வயதில் இப்படி தவிக்க விடுகிறார்கள்” என்றார்.

வங்கிகள் மீது புகார்

இது தொடர்பாக அஞ்சல் அலுவலக அதிகாரிகளிடம் கேட்ட போது, “எங்களுக்கு வங்கிகளில் இருந்த பணம் வரவேயில்லை. இருந்த தொகையைப் புரட்டி, ஓய் வூதியர்களுக்கு மட்டும் அளித்து விட்டோம். எங்கள் சம்பளத்தைக் கூடப் பெற முடியவில்லை. தள்ளாத வயதில் வரும் முதியவர்களுக்கு ஓய்வூதியத் தொகையைக் கொடுக்க முடியாமல் இருப்பது மிகுந்த வேதனையாக உள்ளது. வங்கியில் இருந்து வர வேண்டிய தொகை பல நாட்களாகியும் வராததால், மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளோம்” என்றனர்.

பீளமேடு பகுதியைச் சேர்ந்த திருஞானசம்பந்தம் (82) என்பவர், தலைமை அஞ்சல் அலுவலகத்தில் மட்டும்தான் ஓய்வூதியத் தொகை கிடைக்கிறது என்பதை அறிந்து, உறவினர்கள் உதவியுடன் அலுவலகம் வந்திருந்தார். பேச முடியாமல், தனது பெயரை மட்டும் எழுதிக் காண்பித்தார். மருத்துவமனையில் இருந்து அவர் வந்துள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x