Published : 30 Jan 2014 12:51 PM
Last Updated : 30 Jan 2014 12:51 PM
ராமேஸ்வரம் மீனவர்கள் 38 பேரை இலங்கை கடற்படையினர் புதன்கிழமை நள்ளிரவு சிறைபிடித்தனர்.
ராமேஸ்வரம் மீனவர்கள் 25 பேரை இலங்கை கடற்படையினர் ஜன.21-ம் தேதி சிறைபிடித்தனர். அவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த மீனவர்களை விடுவிக்கக்கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் வேலைநிறுத்தம் செய்தனர்.
இதனிடையே, இருநாட்டு மீனவர்கள் பேச்சுவார்த்தை ஜனவரி 27-ம் தேதி நடைபெற்றது. அப்போது சில சுமுகமான முடிவுகள் எடுக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து வேலைநிறுத்தப் போராட்டத்தைக் கைவிட்டு 600க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் இரண்டாயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் புதன்கிழமை முதல் கடலுக்குச் சென்றனர். இவர்கள் கச்சத் தீவு அருகே நள்ளிரவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது இலங்கை கடற்படையினர் சிறிய ரக கப்பல்களில் ரோந்து வந்தனர்.
அவர்கள், இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்ததாகக் கூறி 38 மீனவர்களை சிறைபிடித்தனர். அவர்களது 6 விசைப்படகுகளையும் கைப்பற்றினர். சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் காங்கேசன் துறைக்கு கொண்டு செல்லப்பட்டு இலங்கை காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். போலீஸ் விசாரணைக்குப் பிறகு ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் 38 மீனவர்களும் ஆஜர்படுத்தப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT