Published : 15 Jun 2016 08:06 AM
Last Updated : 15 Jun 2016 08:06 AM

சன் குழும வானொலிகளுக்கு பாதுகாப்பு சான்றிதழ் வழங்க மறுத்த மத்திய அரசின் ஆணை ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

தயாநிதி மாறனின் ஏர்செல் மேக்ஸிஸ் வழக்கை காரணம் காட்டி, சன் குழும பண்பலை வானொலிகளுக்கு பாதுகாப்பு அனுமதி சான்றிதழ் தரமறுத்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் நேற்று ரத்து செய்து உத்தரவிட்டது.

சன் டிவி நெட்வொர்க் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கே.விஜயகுமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:

சன் டிவி நெட்வொர்க் கடந்த 1985-ல் தொடங்கப்பட்டது. இதன் 25 சதவீத பங்குகள் பொதுமக்கள் வசம் உள்ளது. 2015 ஜூலை 10-ம் தேதி நிலவரப்படி சன் டிவி பங்கு களை 38,233 பேர் வைத்துள்ளனர். இதன் சந்தை மதிப்பு ரூ.14 ஆயிரத்து 175 கோடி. கடந்த 2005-ல் சென்னை, கோவை, மதுரை, நெல்லையில் சூரியன் பண்பலை வானொலி தொடங்கினோம். இவற்றை பேஸ் 2-ல் இருந்து பேஸ் 3-க்கு மாற்றுவதற்கான ஏலத்தில் பங்கேற்க முறைப்படி விண்ணப்பித்தோம். ஆனால், எங்கள் நிறுவனத்துக்கு மத்திய அரசின் பாதுகாப்பு அனுமதி (செக்யூரிட்டி க்ளியரன்ஸ்) சான்றிதழ் இல்லை என்று கூறி எங்களை நிராகரித்தனர்.

சன் டிவியின் பங்குதாரரான தயாநிதி மாறன் மீது ஏர்செல் மேக்ஸிஸ் வழக்கு நிலுவையில் இருப்பதால், அவர் சார்ந்துள்ள சன் டிவி நிறுவனங்களுக்கு மேற்படி சான்றிதழ் தரவில்லை என மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் கூறியுள்ளது. இது உள்நோக்கம் கொண்டது, சட்டவிரோதமானது.

ஒரு வழக்கில் குற்றம் நிரூபிக்கப் பட்டால் மட்டுமே ஏலத்தில் பங் கேற்க அனுமதிக்க முடியாது என விதிமுறைகள் உள்ளபோது, தயாநிதி மாறன் மீதான குற்றச் சாட்டை காரணம் காட்டி, சன் குழும நிறுவனங்கள் ஒதுக்கப்பட்டிருப்பது தவறு. இவ்வாறு அதில் கோரியிருந் தார்.

இந்த மனு ஏற்கெனவே விசா ரணைக்கு வந்தபோது, சன் குழும பண்பலை வானொலிகளை ஏலத் தில் பங்கேற்க அனுமதிக்குமாறு மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் முடிவுகளை சீலிட்ட உறையில் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், நீதிபதி எம்.துரைசுவாமி முன்பு இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏலம் தொடர்பான விவரங்கள் அடங்கிய சீலிடப்பட்ட உறை சமர்ப்பிக்கப்பட்டது.

சன் டிவி தரப்பில் ஆஜரான வழக் கறிஞர்கள், ‘‘2005-ல் இருந்து பண் பலை வானொலி நடத்துகிறோம். பாதுகாப்பு தொடர்பாக எந்த பிரச் சினையும் எழுந்தது இல்லை. தயா நிதி மாறன் மீதான வழக்கைக் கார ணம் காட்டி, எங்கள் பண்பலை களுக்கு பாதுகாப்பு அனுமதி சான் றிதழ் தர மத்திய அரசு மறுத்துள்ளது’’ என வாதிட்டனர். மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ‘‘ஏல விதிமுறைகளின்படிதான் சன் குழும நிறுவனங்களுக்கு சான்றிதழ் மறுக்கப்பட்டது’’ என வாதிட்டனர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சன் குழும வானொலி களுக்கு பாதுகாப்பு அனுமதி சான் றிதழ் தர மறுத்து மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, ஏலத்தின் முடிவுகளை வெளியிடவும் உத்தர விட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x